வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில் இதனால் பெரியளவில் மனித உயிர்கள் இழப்பைச் சந்திக்கும் இதற்கு ரஷ்யாவை பொறுப்பாகும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை, உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்யா உக்ரைன் இடையே போர் மூண்டுவிடக் கூடாது என உலக நாடுகள் பலவும் சமரசம் பேசி வந்தநிலையில், ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்ரேஸ், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை ரஷ்யா கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் ராணுவ நடவடிக்கைக்கு புதின் உத்தரவிட்டார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒரே வாரத்தில் இரண்டு முறை கூடி ஆலோசனை நடத்தியுள்ளது. ஆனால் எதையுமே பொருட்படுத்தாமல்
ஜெனீவாவில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
டான்ஸ்க், லாஹன்ஸ்க் பகுதிகளில் உள்ள ரஷ்ய ஆதரவாளர்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாகவே நான் ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று புதின் கூறினார்.
» அமெரிக்க எச்சரிக்கை முதல் புதினின் போர் அறிவிப்பு வரை - உக்ரைன் நெருக்கடியின் சமீபத்திய டைம்லைன்
» மூண்டது போர்! - உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு
ரஷ்யாவின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது. இதில் பிற நாடுகள் தலையிட்டால் மிக மோசமான முடிவை சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது. தலைநகர் கீவில் குண்டு மழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் நிச்சயமாக மனித உயிர்களுக்கு பேரிழப்பு ஏற்படும். இதற்கு உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவையே பொறுப்பாக்கும். இந்தத் தாக்குதல் நியாயமற்றது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஜி7 நாடுகளான பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாட்டுத் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.