கனடா பிரதமரை ஹிட்லருடன் ஒப்பிட்ட எலான் மஸ்க்: குவிந்த கண்டனங்களால் ட்வீட் நீக்கம்

By செய்திப்பிரிவு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை ஹிட்லருடன் ஒப்பிட்டு பதிவிட்ட ட்வீட்டை நீக்கினார் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்.

இவர் உலகிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்ஸா நிறுவனத்தின் அதிபருமாவார்.

முன்னதாக, கனடாவில் எல்லையை கடந்து அமெரிக்கா செல்லும் லாரி ஓட்டுநர்களும், அமெரிக்காவிலிருந்து கனடா திரும்பும் லாரி ஓட்டுநர்களும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று கனடா அரசு கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் கடந்த மாதம் 29-ம் தேதி லாரிகளுடன் தலைநகர் ஒட்டாவாவில் குவிந்து போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பரவியது. போராட்டத்தை ஒடுக்கும் விதமாக தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அடுத்த 30 நாட்களுக்கு இது அமலில் இருக்கும்என்று பிரதமர் ட்ரூடோ தெரிவித்தார்.

இதன்மூலம் போராட்டக்காரர்களை சிறையில் அடைக்கவும் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும், நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்புகளை பாதுகாக்கவும் போலீஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவசரநிலையை பிரகடனப்படுத்தியதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உச்சபட்சமாகக் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (வியாழன்) ஒரு மீமைப் பகிர்ந்தார். அதில், என்னை தயவுசெய்து ஜஸ்டின் ட்ரூடோவுடன் ஒப்பிடாதீர்கள் என்று ஹிட்லர் கூறுவது போல் இருந்தது.

இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனம் குவிந்தது. இதனையடுத்து எலான் மஸ்க் அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE