ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 32 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 32 பேர் பலியாகினர்.

இதுகுறித்து ஊடகங்கள், “கந்தஹார் நகரில் உள்ள ஷியா மசூதி ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 32 பேர் பலியாகினர். 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். மூன்று குண்டுகள் வெடித்ததாக குண்டுவெடிப்பில் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த குண்டுவெடிப்பு குறித்து உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சையத், “ஷியா மசூதியில் நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்பு எங்களைக் கவலையடையச் செய்துள்ளது. சிறப்புப் படையினர் குண்டுவெடிப்பு நடந்த இடத்துக்கு விரைந்துள்ளனர். குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதற்கான காரணம் விரைவில் கண்டெறியப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐஎஸ் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

ஆப்கனின் குண்டுஸ் நகரில் ஷியா மசூதியில் சில நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் பலர் பலியாகினர். இந்தச் சம்பவத்துக்கு ஐஎஸ் பொறுப்பேற்றது.

பின்னணி

ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்தனர். அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி அறிவித்தனர்.

ஆப்கனின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த், அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மவுளவி அப்துல் சலாம் ஹனாபியும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் 90களில் தலிபான்களின் ஆட்சி அச்சம் தரும் வகையில் இருந்ததால், அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்று வருகின்றனர். ஆனால், மக்கள் யாரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று தலிபான்கள் கேட்டுக்கொண்டனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அங்கு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE