தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்குத் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளிலிருந்து பிரிட்டன் விலக்கு அளிக்க உள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் கூறும்போது, “15 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்காகப் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன. கரோனா தொற்று மிதமாக உள்ள நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு (தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் போட்டிருக்க வேண்டும்) தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்த திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஜூலை 19-ம் தேதி முதல் பிரிட்டனில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படவுள்ளன. அங்கு, மூன்றாம் முறையாக விதிக்கப்பட்ட ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்பட்டு வருகிறது.
ஐரோப்பிய நாடுகளிலேயே ரஷ்யாவுக்குப் பின்னர் பிரிட்டனில்தான் அதிகப்படியான கரோனா உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. பிரிட்டனில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
» ஆஃப் சைடின் கடவுள்; தாதாவின் 49-வது பிறந்த நாள்: கங்குலிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து
» தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அனைத்து வழக்குகளும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்
முன்னதாக, கரோனா அலையின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் மிகவும் முன்கூட்டியே அவசர, அவசரமாக முழு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும், அதற்கான விலையை நாம் கொடுக்க வேண்டியிருக்கும் எனவும், உலக சுகாதார நிறுவனத்தின் அவசர சுகாதாரத் திட்டத்தின் தலைவர் மைக்கேல் ரியான் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.