அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஆண்டு முழுவதும் டோனட் இலவசம்: கடையில் குவியும் கூட்டம்

அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஆண்டு முழுவதும் டோனட் இலவசமாக வழங்கப்படும் என்று அங்குள்ள 'க்ரிஸ்பி க்ரீம்' என்ற கடை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் அந்தக் கடையில் கூட்டம் அலைமோதுகிறது.

உலகம் முழுவதும் கரோனா பெருந்தொற்று கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கரோனா வைரஸுக்கு எதிராகத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபோதும் அது மக்கள் மத்தியில் பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஆண்டு முழுவதும் டோனட் இலவசமாக வழங்கப்படும் என்று அங்குள்ள 'க்ரிஸ்பி க்ரீம்' என்ற கடை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் அந்தக் கடையில் கூட்டம் அலைமோதுகிறது.

இதுகுறித்து 'க்ரிஸ்பி க்ரீம்' வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், தடுப்பூசி அட்டையைக் காண்பித்து, தனிநபராக எங்கள் கடைக்கு வந்து தினந்தோறும் இலவச டோனட்டைப் பெற்றுச் செல்லலாம். ஆண்டு முழுவதும் இந்தச் சலுகையை வழங்க முடிவெடுத்துள்ளோம்.

அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது மக்களின் தனிப்பட்ட முடிவு. அதில் நாங்கள் தலையிடவில்லை. எனினும் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நாடு பாதுகாக்கப்படும் என்ற எண்ணத்தில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கும் மார்ச் 29 முதல் மே 24 வரை திங்கட்கிழமைகளில் இலவச டோனட்டும் காஃபியும் வழங்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE