சீனாவின் கரோனா பலி, பாதிப்பு எண்ணிக்கை உள்ளிட்ட நிலவரங்களை உலகச் சுகாதார அமைப்பு மறைத்து சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கடும் குற்றச்சாட்டு எழுந்து நிதியையும் நிறுத்திய அமெரிக்கா தற்போது அதன் தலைமை இயக்குநர் கேப்ரியேசிஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நெருக்கடி அளித்துள்ளது.
ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் உலகச் சுகாதார அமைப்பின் மீது சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
வெளியுறவு விவகாரக் கமிட்டியின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் 17 பேர் ட்ரம்பின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியதோடு டெட்ராஸ் அதனோம் கேப்ரியேசிஸ் ராஜினாமா செய்வதை உறுதி செய்தால் மீண்டும் நிதிப்பங்களிப்பு செய்யலாம் என்று மாற்று ஆலோசனை வழங்கியுள்ளனர்..
கரோனா வைரஸினால் உலகம் தத்தளித்து வரும் நிலையில் உலகச் சுகாதார அமைப்புக்கு நிதியை நிறுத்துவதா என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பிடிவாதப் போக்குக்கு உலக நாடுகள், அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
ஆனால் அதிபர் ட்ரம்ப் உலகச் சுகாதார அமைப்பு சீனாவின் பொய்களைப் பரப்ப பயன்பட்டது என்று கடுமையாகக் குற்றம்சாட்டி அதன் மீது நம்பிக்கை இழந்து விட்டதாகச் சாடினார்.
இதனையடுத்து டெட்ரோஸ் கேப்ரியேசஸ் ராஜினாமா செய்ய நெருக்கடி வலுத்து வருகிறது.