அமெரிக்கர்களுக்கு வழங்கும் நிதி காசோலையில் ட்ரம்ப் பெயர் அச்சிட உத்தரவு

கரோனா வைரஸ் தொற்று காரணமாக நெருக்கடியால் தவிக்கும் அமெரிக்கர்களுக்கு வழங்கும் காசோலையில் பல விமர்சனங்களுக்கு மத்தியில் ட்ரம்ப்பின் பெயரை அச்சிட அந்நாட்டின் கருவூல துறை உத்தரவிட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் கரோனா தொற்று ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

தற்போதைய நிலவரம்படி அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு ககடந்த 24 மணி நேரத்தில்
2,569 பேர் உயிரிழந்துள்ளனர், இதனால் அங்கு பலியானவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 6 லட்சத்துக்கு அதிகமானவர்கள் கரோனா வைரஸ் தொற்ற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 48 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

ஊரடங்கு காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியை அமெரிக்க மக்கள் சந்தித்துள்ளனர். பொருளாதார நெருக்கடியை நீக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் கரோனா வைரஸ் காரணமாக பொருளாதார இழப்பை சந்தித்துள்ள அமெரிக்கர்களுக்கு நிதி வழங்கப்படும் என்று ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

அவ்வாறு வழங்கப்படும் நிதி காசோலையில் ட்ரம்ப்பின் பெயரை அச்சிடவும் ட்ரம்ப் பரிந்துரைத்தார். இவ்விவகாரத்தை ஜன நாயகக் கட்சி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சித்து இருந்தன.

இந்த நிலையில் காசோலைடில் ட்ரம்ப்பின் பெயரை அச்சிட அந்நாட்டு கருவூல துறை உத்தரவிட்டுள்ளது.

மக்களுக்கு வழங்கும் நிவாரண நிதியில் அமெரிக்க அதிபர் பெயர் அச்சிடப்படுவது இதுவே முதல் முறை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE