பாகிஸ்தான் பாடகி ராபி பிர்ஸாடா மீண்டும் மோடியைக் குறிவைத்த வாசகத்துடன் தான் தற்கொலைத் தீவிரவாதி போன்ற வெடிபொருள் ஆடையுடன் காட்சியளிக்கும் புகைப்படத்தை தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு நெட்டிசன்கள் வசைக்குச் சிக்கினார்.
இந்த ‘தற்கொலைத் தாக்கு’புகைப்படம் நெட்டிசன்களிடம் கடும் கோபாவேசத்தைக் கிளப்ப ராபி பிர்ஸாதாவை பொறுப்பற்றவர் என்றும் வன்முறையைத் தூண்டுகிறார் என்றும் அவர்கள் ராபியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு முன்பாக செப்.2ம் தேதி ராபி பிர்ஸாதா வெளியிட்ட ட்விட்டர் பதிவில் அவர் நிறைய பாம்புகள், அலிகேட்டர்கள் ஆகியவற்றுடன் தோன்றி பிரதமர் மோடியை அச்சுறுத்துவது போன்ற வீடியோவை வெளியிட்டார்.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்று அவர் இது போன்ற பொறுப்பற்ற சமூகவலைத்தளப் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
கடந்த முறை சட்ட விரோதமாக பிர்ஸாதா அந்த பாம்புகளை வைத்திருந்ததாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனையடுத்து லாகூர் கோர்ட் இவருக்கு கைது வாரண்டையும் பிறப்பித்தது.