புத்தரின் முடி, பல், எலும்புகள் அடங்கிய தங்கத் தாழி மீட்பு: திருடுபோனதாக தேடப்பட்டு வந்தது

மலைக்கோயில் ஒன்றில் வைக்கப்பட்டு திருடுபோனதாக தேடப்பட்டு வந்த புத்தருடையது என கருதப்படும் முடி, பற்கள், எலும்புகள் அடங்கிய தங்கத்தாழி மீட்கப்பட்டது.

கம்போடியாவில் உள்ள மலைக்கோயில் ஒன்றிலிருந்து இந்த தங்கத்தாழி, சிறு சிலைகள், உள்ளிட்டவை காணாமல்போனது கடந்த டிசம்பரில் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனால் நாட்டில் கொந்தளிப்பு எழுந்து தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. உடாங் நகரில் உள்ள கோயிலிலிருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வீட்டில் போலீஸார் வியாழக்கிழமை நடத்திய அதிரடிசோதனையில் இந்த உடைமைகள்கிடைத்தன.

தாழியில் வைக்கப்பட்டிருந்த எல்லா பொருள்களும் பத்திரமாக இருப்பதாக தேசிய காவல்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இந்த சோதனைக்குப் பிறகு சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த திருட்டுக்கு மூலகாரணமான நபரை தேடும்பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

டிசம்பரில் மலைக்கோயிலின் 5 காவலர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். புத்தரின் 2500ம் ஆண்டு பிறந்த தினத்தை கொண்டாட 1950ம் ஆண்டுகளில் இலங்கையிலிருந்து புத்தரின் புனித முடி, பற்கள், எலும்புகள் கம்போடியாவுக்கு கொண்டுவரப்பட்டன. 2002ல் அப்போதைய மன்னர் நரோடம் சிகானூக் இந்த உடமைகளை நாம்பென் நகரிலிருந்து உடாங் நகரில் வைக்க உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE