என் தாய் வசிக்கும் வீடு அளவுக்கு உங்கள் கார் மிகப் பெரியது: ஒபாமாவிடம் கூறிய பிரதமர் நரேந்திர மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘‘என் தாய் வசிக்கும் வீடு அளவுக்குஉங்கள் கார் மிகப் பெரிதாக உள்ளது’’ என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிடம் பிரதமர் மோடி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல்முறையாக பிரதமர் பதவியேற்றது முதல் நரேந்திர மோடி பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருதரப்பு உறவுகளை பலப்படுத்தி வருகிறார். உலக நாடுகளின் தலைவர்களுடன் வெளிப்படையாக பழகி நெருக்கமான முறையில் இந்திய உறவை மேம்படுத்தி வருகிறார். அப்படி அவர் வெளிநாடுகளுக்கு செல்லும் போது மத்திய வெளியுறவுத் துறை செயலர்கள், தூதரக அதிகாரிகள் பலர் உடன் இருக்கின்றனர். அவர்கள் பல சந்தர்ப்பங்களில் பிரதமர் மோடி எப்படி பேசினார், எப்படி செயல்பட்டார் என்று ஆச்சரியத்துடன் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

அந்த வகையில், கடந்த 2014-ம்ஆண்டு பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்டார். அப்போது அவருடன் வெளியுறவுத் துறை செயலர் வினய் குவத்ரா சென்றுள்ளார். தற்போது அவர் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக உள்ளார். இந்நிலையில், 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்ற போது, அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்தது குறித்து சமூக வலைதளத்தில் வினய் குவத்ரா நேற்று கூறியிருப்பதாவது:

அமெரிக்கா வந்த பிரதமர் மோடி, அப்போதைய அதிபர் ஒபாமாவுடன் அலுவல் ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தி முடித்தார். அதன் பிறகு, இருவரும் மார்டின் லூதர் சிங் ஜூனியரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த புறப்பட்டனர். சுமார் 12 நிமிட பயண தூரத்தில் நினைவிடம் உள்ளது. அவர்களை அழைத்து செல்ல ஒபாமாவின் மிக நீளமான லிமோசின் கார் வந்தது. அதில் இருவரும் ஏறி அமர்ந்தனர். இருவரும் தங்கள் குடும்பத்தைப் பற்றி பேச தொடங்கினர்.

அப்போது, ‘‘உங்கள் தாய் எப்படி இருக்கிறார்?’’ என்று பிரதமர் மோடியைப் பார்த்து ஒபாமா கேட்டார். அதற்கு ‘‘பிரிசிடென்ட் ஒபாமா, நான் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். உங்களுடைய இந்த கார், என் தாய் வசிக்கும் வீட்டளவுக்கு உள்ளது’’ என்று பிரதமர் மோடி சிரித்தபடி பதில் அளித்தார். இந்த பதிலை ஒபாமா சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவரும் பதிலுக்கு சிரித்தார். அதேநேரத்தில் பிரதமர் மோடியின் வெளிப்படைத் தன்மை, நேர்மை போன்றவற்றை ஒபாமா புரிந்து கொண்டார். இவ்வாறு வினய் குவத்ரா கூறியுள்ளார்.

அதே பயணத்தின் போது 1893-ம் ஆண்டு உலக மதங்கள் மாநாடு தொடர்பான அரிய புத்தகத்தை பிரதமர் மோடிக்கு ஒபாமா பரிசாக வழங்கினார். அந்தப் புத்தகத்தில் சுவாமி விவேகானந்தரின் உரையும் அடங்கியுள்ளது. பிரதமர் மோடி3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இந்தியதூதர் வினய் குவத்ரா கூறியுள்ள அனுபவங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE