லெபனானில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட ‘பேஜர்' தாக்குதலில் கேரள இளைஞருக்கு தொடர்பு

By செய்திப்பிரிவு

பெய்ரூட்: லெபனான் நாட்டை சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஈரான்ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றனர். ஈரானின் தூண்டுதலால் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேல் ராணுவம் அவ்வப்போது தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஆரம்ப காலத்தில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வந்தனர். இஸ்ரேல் உளவு அமைப்பு, ஸ்மார்ட்போன்களின் மூலம் ஹிஸ்புல்லாதீவிரவாதிகளின் இருப்பிடத்தைஎளிதாக கண்டுபிடித்து தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு பேஜர், வாக்கி டாக்கிக்கு மாறினர். இதையறிந்த இஸ்ரேல் உளவுத் துறை ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில், பேஜர் தயாரிப்புக்காக 3 போலி நிறுவனங்களை தொடங்கியது. அதில் ஒரு நிறுவனமான பிஏசிகன்சல்டிங், தைவான் நாட்டின்கோல்ட் அப்பல்லோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. இதன்படி கோல்டு அப்பல்லோ பெயரில் பிஏசி கன்சல்டிங் நிறுவனம் பேஜர்களை தயாரித்து வந்தது.

பல்கேரியா நாட்டில் பதிவு செய்யப்பட்ட நார்டா குளோபல் லிமிடெட்கடந்த பிப்ரவரியில் பிஏசி நிறுவனத்திடம் இருந்து பேஜர்களை கொள்முதல் செய்து ஹிஸ்புல்லாதீவிரவாதிகளுக்கு வழங்கியுள்ளது. நார்டா குளோபல் லிமிடெட்நிறுவனத்தின் தலைவராக கேரளாவின் வயநாட்டை பூர்வீகமாககொண்ட ரென்சன் உள்ளார். இவர்நார்வே நாட்டின் குடியுரிமையைபெற்றவர் ஆவார். இவருக்கும்இஸ்ரேலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படு கிறது.

கடந்த 17-ம் தேதி ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்திய 5,000 பேஜர்கள் வெடித்துச் சிதறிய சம்பவத்துக்கு பிறகு ரென்சன் திடீரென மாயமாகிவிட்டார். அவர்அமெரிக்காவில் பதுங்கியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பெல்ஜியம் போலீஸார் நடத்திய முதல்கட்டவிசாரணையில் ரென்சனின் நார்டாகுளோபல் நிறுவனம் போலி என்பது தெரியவந்துள்ளது.

ரென்சனின் தந்தை ஜோஸ் கேரளாவின் வயநாடு மாவட்டம், மானந்தவாடியில் தையல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். உள்ளூர் மக்கள் அவரை, டெய்லர் ஜோஸ் என்றழைக்கின்றனர். அவர் கூறும்போது, ‘‘எனது மகன் 10 ஆண்டுகளாக நார்வே நாட்டில் வசிக்கிறார். ஆனால் அவர் என்ன வேலை பார்க்கிறார் என்பது தெரியாது” என்றார். ரென்சனை கைது செய்து விசாரணை நடத்தினால் பேஜர் தாக்குதலின் முழுமையான பின்னணி தெரியவரும் என்று பெல்ஜியம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE