இந்தோனேஷிய பயணத்தின்போது போப் பிரான்சிஸ் மீது தாக்குதல் நடத்த சதி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 7 பேர் கைது

By செய்திப்பிரிவு

ஜகார்த்தா: இந்தோனேஷிய பயணத்தின் போது போப் பிரான்சிஸ் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 7 பேர் கைது செய்யப்பட்டதாக இந்தோனேஷிய போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஆசிய-பசிபிக் நாடுகளுக்கு போப் பிரான்சிஸ் 12 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை அவர் இந்தோனேஷியாவில் பயணம் செய்தார். அப்போது அவர் மீது தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 7 பேர் திட்டமிட்டுள்ளதாக இந்தோனேஷிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் அவர்களை இந்தோனேஷிய போலீஸார் கைது செய்தனர். இந்தோனேஷியாவின் போகர், பெகாஸி, மேற்கு சுமத்ரா மற்றும் பங்கா பெலிடங் தீவு ஆகிய பகுதிகளில் இந்த கைது சம்பவங்கள் நடந்தன. ஒரு தீவிரவாதி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வில்கள் மற்றும் அம்புகள், டிரோன், ஐஎஸ்ஐஎஸ் பிரச்சார அறிக்கைகள் ஆகியவை இருந்தன.

நேரடி ஒளிபரப்பால் கோபம்: அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜகார்த்தாவில் உள்ள இஸ்திக்லால் மசூதிக்கு போப் பிரான்சிஸ் வருகை தந்ததும், அவரது பயணத்தை முன்னிட்டு, அனைத்து டி.வி. நிலையங்களும், வழக்கமான தொழுகை நிகழ்ச்சியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, போப் பிரான்சிஸ் பயணத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்யஇந்தோனேஷிய அரசு வேண்டுகோள் விடுத்ததும் கோபத்தைஏற்படுத்தியதாக தெரிவித்துஉள்ளனர்.

இந்த தீவிரவாத சதியைஇந்ததோனேஷிய காவல் துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவினர் முறியடித்துள்ளனர். பப்புவா நியூகினியாவில் நேற்று சுற்றுப் பயணம் செய்த போப் பிரான்சிஸ், இன்று கிழக்கு திமோர் செல்கிறார். சிங்கப்பூரில் அவர் தனது பயணத்தை நிறைவு செய்கிறார். போப்பிரான்சிஸ் உடன் அவரது நெருங்கிய உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு குழுவினர் சென்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE