“வேற்றுமையில் ஒற்றுமை” - தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியில் போப் பிரான்சிஸ் உரை!

By செய்திப்பிரிவு

ஜகார்த்தா: தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியான இந்தோனேசியாவின் இஸ்திக்லால் மசூதியில் போப் பிரான்சிஸ் உரையாற்றினார்.

ஆசிய பசிபிக் நாடுகளில் போப் பிரான்சிஸ் 12 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி தனது சுற்றுப் பயணத்தின் மூன்றாவது நாளில் இந்தோனேசியா சென்றடைந்த அவர், தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியான இஸ்திக்லால் மசூதிக்கு சென்றார். அங்கு மசூதியின் இமாம் ஆன நசுருதீன் உமர் போப் பிரான்சிஸை வரவேற்றார். அங்கு இந்தோனேசிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆறு மதங்களைச் சேர்ந்த (புத்த மதம், இஸ்லாம், இந்து மதம், கத்தோலிக்க மதம், புரோட்டஸ்டன்ட் மதம், கன்ஃபூசிய மதம்) தலைவர்களும் இருந்தனர்.

போப் பிரான்சிஸை வரவேற்றுப் பேசிய நசுருதீன் தனது உரையில் புவிவெப்பமாயதல் மற்றும் பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட பிரச்சினைகளை மேற்கோள் காட்டினார். இதன் பிறகு பேசிய போப் பிரான்சிஸ் “நாம் அனைவரும் சகோதரர்கள், யாத்ரீகர்கள். அனைவரும் கடவுளை நோக்கிச் செல்லும் வழியில், வேற்றுமைகளை இருந்தாலும் ஒற்றுமையுடன் முன்னேற வேண்டும். போர்கள் போன்ற மனிதகுலத்தின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பொறுப்பை நாம் ஏற்கவேண்டும்” என்றார். பின்னர் பார்வையற்ற சிறுமி ஒருவர் குர்ஆனில் இருந்து சில வசனங்களையும், பைபிளில் இருந்து சில வசனங்களை படித்துக் காட்டியதை போப் பிரான்சிஸ் மற்றும் நசுருத்தீன் கேட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE