தாய்லாந்தின் புதிய பிரதமராக 37 வயது பெண் தலைவர் தேர்வு - பின்னணி என்ன?

By செய்திப்பிரிவு

பாங்காங்: தாய்லாந்து நாட்டின் புதிய பிரதமராக அந்நாட்டின் முன்னாள் பிரிவினைவாத தலைவராக அறியப்படும் தக்‌ஸின் ஷினவத்ராவின் இளைய மகள் பேடோங்தரன் தக்‌ஸினை அந்நாட்டு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுத்துள்ளது. ஷினவத்ராவின் குடும்பத்தில் இருந்து தந்தை தக்‌ஸின் மற்றும் அத்தை யின்லிங் ஷினவத்ராவுக்கு பின்பு பொது வாழ்வுக்கு வரும் மூன்றாவது தலைவர் பேடோங்தரன் தக்‌ஸின். தனது அத்தைக்கு பின்பு இரண்டாவது பெண் பிரதமராகி உள்ள பேடோங்தரனுக்கு வயது 37.

தாய்லாந்தின் ஆளுங்கட்சியான பேயு தாய் கட்சியைச் சேர்ந்தவரான பேடோங்தரன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல்லை. அவர் பிரதமர் வேட்பாளராக இருக்க, அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. பிரதமர் பதவிக்கு அவர் ஒருவர் மட்டுமே போட்டியிட்ட நிலையில், வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும்போதே அவர் பெரும்பான்மையைப் பெற்றிருந்தார். முன்னதாக, பேடோங்தரனுக்கு முன்பு பிரதமராக இருந்தவர் விதிகளை மீறியதற்காக அரசியலமைப்பு நீதிமன்றத்தால் இரண்டு நாட்களுக்கு முன்பு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

தாய்லாந்தின் பரவலாக, அதேநேரத்தில் பிரிவினைவாத அரசியல் பிரமுகராக அறியப்படும் தக்ஸின், ராணுவ சதி மூலமாக கடந்த 2006-ம் ஆண்டு பதவியிலிருந்து இறக்கப்பட்டார். பேயு தாயின் தலைவராக தக்ஸின் அறியப்படுகிறார். அவரது புகழ் மற்றும் ஆளுமை பேடோங்தரனின் ஆதரவாக உள்ளது என்று கூறப்படுகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு பேயு தாய் கட்சியின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டதன் மூலம் அவர் அரசியலுக்குள் நுழைந்தார். தேர்தலுக்கு முன்பு கட்சியின் மூன்று பிரதமர் வேட்பாளர்களில் ஒருவராக அவரின் பெயர் இடம்பெற்ற பின்பு கடந்த ஆண்டு பேயு தாய் கட்சியின் தலைவராக பேடோங்தரன் அறிவிக்கப்பட்டார்.

பேயு தாய் கட்சிக்கான பிரச்சாரத்தில் இருந்தபோது, தனது குடும்ப உறவுகளை ஒப்புக்கொண்ட பேடோங்தரன், தான் தந்தையின் பினாமி இல்லை என்று வலியுறுத்தினார். அவர் கூறுகையில், "நான் என்னுடைய தந்தையின் நிழல் இல்லை. நான் எப்போதுமே அவரின் மகள்தான், ஆனால் சுயமாக முடிவெடுக்கக்கூடியவர்" என்று தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் புதன்கிழமை பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேடோங்தரன் நியமனம் நிகழ்ந்துள்ளது. லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட ஒருவரை அமைச்சரவை உறுப்பினராக நியமித்தது தொடர்பான குற்றச்சாட்டில் அவரை நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE