சிறை தண்டனை பெற்றவரை அமைச்சராக நியமித்ததால் தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா பதவி நீக்கம்

By செய்திப்பிரிவு

பாங்காக்: தாய்லாந்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமராக பொறுப்பேற்றவர் ஸ்ரெத்தா தவிசின். இவரது அமைச்சரவையில் பிச்சித் என்ற வழக்கறிஞர் சேர்க்கப்பட்டார். இவர் முன்னாள் பிரதமர் தக்சினின் உறவினர். இவர் கடந்த 2008-ம் ஆண்டில் நீதிமன்ற அவமதிப்புக்காக 6 மாதங்கள் சிறை தண்டனை பெற்றவர். இதனால் இவரது நியமனத்தை எதிர்த்து முன்னாள் செனட் உறுப்பினர்கள் 40 பேர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் தாய்லாந்து அரசியல்சாசன நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. இதில் பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவி நீக்கம் செய்ய 5 நீதிபதிகள் ஓட்டளித்தனர். அவர்கள் கூறிய தீர்ப்பில், ‘‘அமைச்சராக நியமிக்கப்பட்ட பிச்சித் ஒழுங்கீனம் காரணமாக சிறை தண்டனை பெற்றவர் என்பதை அறிந்தும், அவரை அமைச்சராக பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் நியமித்துள்ளார். இதன் மூலம் அரசியல் சாசனத்தின் ஒழுக்க நெறிமுறை விதிகள் மீறப்பட்டுள்ளன. இதனால் பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்’’ என தெரிவித்தனர்.

ஸ்ரெத்தா தவிசினின் பதவியைகாப்பாற்றுவதற்காக, அமைச்சரவையில் இருந்து பிச்சின் ராஜினாமா செய்தார். ஆனாலும், ஸ்ரெத்தா தவிசினை நீதிமன்றம் பதவி நீக்கம் செய்தது.

இதுகுறித்து, ஸ்ரெத்தா தவிசின், ‘‘நான் பிரதமராக எனது கடமையை சிறப்பாக செய்தேன். நீதிமன்றத்தின் இந்த முடிவை நான் எதிர்பார்க்கவில்லை. நீதிமன்றத்தின் தீரப்பை ஏற்கிறேன்’’ என்றார். ஸ்ரெத்தா தவிசின் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து ஆளும் பியூ தாய் கட்சி தலைமையிலான கூட்டணி புதிய பிரதமரை தேர்வு செய்யும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE