மணிக்கு 1,000 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ரயில்: சீனா வெற்றிகரமாக சோதனை

By செய்திப்பிரிவு

பெய்ஜிங்: சீன அரசு அதிவேகத்தில் பயணிக்கும் ஹைப்பர்லூப் ரயிலை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. கடந்த ஆண்டு டத்தோங் நகரில், இதற்கென்று 2 கி.மீ தொலைவுக்கு வழித்தடத்தை உருவாக்கியது. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் அதிகவேக ரயில் சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இந்த அதிகவேக ரயில் மாக்லேவ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படக் கூடியது. இந்த ரயிலின் சக்கரம் தண்டவாளத்துடன் உராய்வு கொள்ளாது.இதனால், இந்த ரயிலால் விமானத்துக்கு நிகரான வேகத்தில் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.

தற்போது 2 கி.மீ வழித்தடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், இந்த ரயில் எதிர்பார்த்த வேகத்தை அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஷாங்சி மாகண அரசு மற்றும் சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்கழகம் இணைந்து அதிவேக ரயில் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.

அதிவேக ரயில் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் சீனத் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் இடையே உள்ள 1,200 கி.மீ தூரத்தை 90 நிமிடங்களில் கடக்கமுடியும். தற்போது சீனாவில் பயன்பாட்டில் இருக்கும், மணிக்கு 350 கி.மீ வேகத்தில் செல்லும் புல்லட் ரயில் மூலம் பெய்ஜிங்கிலிருந்து - ஷாங்காய்க்கு 4.18 மணி நேரத்தில் செல்ல முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE