ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம்: அமெரிக்க ராணுவ ஜெனரல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம்

By செய்திப்பிரிவு

ஈரான்: ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலைக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளதால் அமெரிக்க ராணுவ ஜெனரல் மைக்கேல் குரில்லா மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.

இந்த பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று. இஸ்ரேலுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியின் பகுதியாக அமெரிக்க ராணுவ ஜெனரல் மைக்கேல் குரில்லாவின் இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், இந்த பயணத்துக்கு முன்னதாக மத்திய கிழக்கில் போர் நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பின்னணி: ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா ஈரான் சென்றார். ஜூலை 31-ல் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தபோது அவர் படுகொலை செய்யப்பட்டார். அவரது படுக்கை அறையில் ஏற்கெனவே குண்டு வைக்கப்பட்டிருந்ததாக முன்பு தகவல் வெளியானது. ஆனால் ஈரான் ராணுவம் நேற்றுவிடுத்த அறிக்கையில், ‘‘7 கிலோ எடையுள்ள குறுகிய தூரம் சென்று தாக்கும் ஏவுகணை மூலம் இஸ்மாயில் மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது’’ என கூறியிருந்தது.

இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாத், தனது ஈரான் உளவாளிகள் மூலம் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. விருந்தினராக வந்த இஸ்மாயிலை படுகொலை செய்ததற்காக, இஸ்ரேல் கடும் தண்டனை அனுபவிக்கும் என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா எச்சரிக்கை விடுத்திருந்தார். “பழிவாங்கும் நடவடிக்கை சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான விதத்தில் மிகக் கடுமையாக மேற்கொள்ளப்படும். இஸ்மாயில் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க அரசு ஆதரவு அளிப்பது குற்றச்செயல்” என ஈரான் ராணுவம் கூறியது.

“இஸ்ரேல் அனைவரையும் சண்டைக்கு இழுக்கிறது. எனவே இஸ்ரேல் மீது ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்தப்படலாம்” என ஹிஸ்புல்லா தலைவர் ஹாசன் நஸ்ரல்லாவும் சூசகமாக தெரிவித்திருந்தார். காசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஏமனில் உள்ள ஹவுதி தீவிரவாதிகளும் இஸ்ரேலுக்கு எதிரான ஒருங்கிணைந்த தாக்குதலில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, இஸ்ரேலுக்கு பாதுகாப்பு வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், “அச்சுறுத்தலுக்கு எதிராக, இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அமெரிக்கா உதவும்” என தெரிவித்தார்.இதையடுத்து அமெரிக்க கடற்படையில் உள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பலை, ஓமன் வளைகுடா பகுதிக்கு செல்ல அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

ஓமன் வளைகுடா பகுதியில் ஏற்கெனவே யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் விமானம் தாங்கி போர்க்கப்பல் உட்பட இதர போர்க்கப்பல்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும், போர் விமானங்கள் படைப்பிரிவு, ஏவுகணைகள் வீசும் போர்க்கப்பல்கள் ஆகியவற்றையும் மத்திய கிழக்கு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிக்கு செல்ல அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உத்தரவிட்டுள்ளது. காசா மீதான தாக்குதல் தொடங்கியதில் இருந்து, இஸ்ரேலை பாதுகாக்க, அமெரிக்க படைகள் தற்போது மிகப் பெரியளவில் அனுப்பப்படுகின்றன.

இப்படியான சூழலுக்கு மத்தியில் தான் அமெரிக்க ராணுவ ஜெனரல் மைக்கேல் குரில்லாவின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE