இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா போட்டி

By செய்திப்பிரிவு

கொழும்பு: கடந்த 2019-ம் ஆண்டில் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார்.

கடந்த 2022-ம் ஆண்டில் இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதற்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து இருவரும் பதவி விலகினர். இதைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டில் நாடாளுமன்ற எம்.பி.க்களின் கருத்தொற்றுமை அடிப்படையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கவும், பிரதமராக தினேஷ் குணவர்த்தனவும் பதவியேற்றனர்.

இந்த சூழலில் இலங்கை அதிபர் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதில் தற்போதைய அதிபரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இலங்கை முன்னாள் ராணுவ தளபதியும் எம்.பி.யுமான சரத் பொன்சேகா சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “கடந்த 76 ஆண்டுகளாக ஊழல் கட்சிகள் இலங்கையை ஆட்சி செய்து மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தின. ஊழலை வேரறுக்க வேண்டும். இதற்காக அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE