வங்கதேச கலவரத்தில் 115 பேர் உயிரிழப்பு: 1,000 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்

By செய்திப்பிரிவு

டாக்கா: வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்களின் தொடர் கலவரத்தில் இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளர். பாதுகாப்பு கருதி இந்திய மாணவர்கள் சுமார் 1,000 பேர் அங்கிருந்து நாடு திரும்பினர்.

வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்தது. மாணவர்களின் போராட்டம் காரணமாக கடந்த 2018-ல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் அந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அறிவிப்பை வங்கதேச அரசு அண்மையில் அறிவித்தது.

இது பாரபட்சமானது என்றும் திறமை அடிப்படையில் அரசுப் பணியாளர்களை தேர்வு செய்ய வலியுறுத்தியும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் போராட்டக்காரர்களை அவமதிக்கும் வகையில் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 14-ம் தேதி வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து போராட்டம் தீவிரம் அடைந்தது.

நாடு தழுவிய இந்த போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்த ஷேக் ஹசீனா அரசு ஊரடங்கு பிறப்பித்தது. பாதுகாப்பு பணியில் போலீஸாருடன் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டனர். இணைய சேவை முடக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு படையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. மத்திய வங்கதேசத்தில் உள்ள நர்சிங்டி சிறையை போராட்டக்காரர்கள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர். சிறைக்கு தீவைத்த அவர்கள், நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவித்தனர்.

இந்நிலையில் வங்கதேசத்தில் கலவரத்தில் இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இறந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர நூற்றுக்கணக்கானோர் கலவரத்தில் காயம் அடைந்துள்ளனர்.

ஆம்னெஸ்ட் இண்டர்நேஷனல் அமைப்பின் பாபு ராம் பந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கதேசத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. கருத்து வேறுபாடு மற்றும்போராட்டத்துக்கு எதிராக வங்கதேச அதிகாரிகளின் முழுமையான சகிப்பின்மையை இது காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக நாடுதிரும்புவதை வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக சிவில் விமானப்போக்குவரத்து துறை, குடியேற்றத்துறை, எல்லைச் சாவடிகள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் இருந்து இதுவரை 778 இந்திய மாணவர்கள் பல்வேறு எல்லைச் சாவடி வழியாக பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். இதுதவிர டாக்கா மற்றும் சிட்டகாங்கில் இருந்து சுமார் 200 மாணவர்கள் வழக்கமான விமான சேவை மூலம் நாடு திரும்பியுள்ளனர்.

நாடு திரும்பிய இந்திய மாணவர் எண்ணிக்கை 998 ஆக உயர்ந்துள்ளது. இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப டாக்காவில் உள்ள இந்திய தூதரகம், சிட்டகாங், ராஜ்ஷாகி, சில்ஹெட், குல்னா ஆகிய இடங்களில் உள்ள துணைத் தூதரகங்கள் உதவி வருகின்றன. இன்னும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டஇந்திய மாணவர்கள் வங்க தேசத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் உள்ளனர். அவர்களுடன் இந்திய தூதரகங்கள் தொடர்பில் இருந்து வருகின்றன. தேவையான உதவிகளை செய்து வருகின்றன.

சாலை வழியாக நாடு திரும்புவோருக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. வங்கதேசத்தில் இருந்து தொடர் விமான சேவை உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக வங்கதேச சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனங்களுடன் டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் ஒங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. இவ்வாறு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் வங்கதேசத்தில் உள்ள இந்திய மாணவர்கள் தொடர்பான தகவல்களுக்கு டாக்கா தூதரகம் மற்றும் பல்வேறு துணைத் தூதரகங்கள் உதவி எண்களை அறிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE