“என் பக்கம் கடவுள் இருந்தார்” - துப்பாக்கிச் சூட்டுக்குப் பிந்தைய முதல் உரையில் ட்ரம்ப் உருக்கம்

By செய்திப்பிரிவு

“என் பக்கம் கடவுள் இருந்தார்” என அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின்னரான முதல் உரையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (78) போட்டியிட உள்ளார். இதற்காக இப்போதே அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி அன்று அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. காதில் குண்டு பாய்ந்த நிலையில் நூலிழையில் அவர் உயிர் தப்பினார். துப்பாக்கிச் சூடு நடத்திய தாமஸ் மேத்யூவை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

படுகொலை முயற்சியிலிருந்து தப்பித்த பின்னர் மிலுவாக்கியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ட்ரம்ப் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இன்றிலிருந்து 4 மாதங்களில் நாம் வியத்தகு வெற்றியைப் பெற்றிருப்போம். அப்போது நான் பாதி தேசத்துக்கு அல்ல ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கான அதிபராக இருப்பேன். பாதி அமெரிக்காவின் ஆதரவைப் பெறுவதால் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.

அன்றைய தினம் நான் எனது தலையை லேசாக திருப்பியிருக்காவிட்டால் கொலையாளியின் புல்லட் மிகத் துல்லியமாக என் மீது பாய்ந்திருக்கும். இன்று இந்த இரவில் நான் உங்களுடன் இப்படி நின்றுகொண்டிருக்க மாட்டேன். இன்று நான் இங்கே நிற்க எல்லாம் வல்ல இறைவனின் அருளே காரணம். அது ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட தருணம். என்னைச் சுற்றி ரத்தமாக இருந்தபோதும் நான் அந்த நொடியில் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தேன். ஏனெனில் கடவுள் என் பக்கம் இருந்தார். இவ்வாறு அவர் பேசினார்.

டொனால்ட் ட்ரம்ப், வலது காதில் பேண்டேஜ் அணிந்து பொது நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், அவரது ஆதரவாளர்களும் வலது காதில் பேண்டேஜ் அணிந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதனை மக்கள் தங்களது அரசியல் குறியீடாக பார்ப்பதாகவும் தகவல். இது அமெரிக்க நாட்டில் ஃபேஷன் சார்ந்த ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் சதி இருப்பதாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலுக்கு பிறகு ட்ரம்புக்கான ஆதரவு அதிகரித்து இருப்பதாகவும் தகவல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE