பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்ற பெண் எம்.பி @ பிரிட்டன்

By செய்திப்பிரிவு

லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ‘பகவத் கீதை’ மீது சத்தியம் செய்து பதவியேற்றார் 29 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷிவானி ராஜா என்ற பெண் எம்.பி.

அண்மையில் அந்த நாட்டில் நடைபெற்ற தேர்தலில் லீசெஸ்டர் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். இந்த தொகுதி தொழிலாளர் கட்சியின் கோட்டையாக கடந்த தேர்தல்களில் இருந்துள்ளது. இந்த சூழலில் ஷிவானி அங்கு வெற்றி பெற்றுள்ளார். அவர் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் அங்கு போட்டியிட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக லீசெஸ்டர் கிழக்கு தொகுதியை பிரதிநிதித்துவபடுத்துவது தனக்கு பெருமையாக இருப்பதாகவும், பகவத் கீதையின் மீது சத்தியம் செய்து பதவியேற்பாதாக எக்ஸ் தளத்தில் ஷிவானி தெரிவித்தார்.

கடைசியாக கடந்த 1983-ல் அவர் போட்டியிட்ட தொகுதியில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்று இருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியானதும், “இது மெய்யான மாற்றத்துக்கான நேரம் என்றும். இதனால் லீசெஸ்டர் நீல நிறத்துக்கு மாறியுள்ளது. எனது பணி எளிமையானது அல்ல. ஆனால், நகரத்தை மாற்றுவதில் நான் உறுதியாக உள்ளேன்” என அவர் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கின் கொள்கைகளுக்கு ஏற்ப, உள்ளூர் அளவிலான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், சமூக ஒற்றுமையை மேம்படுத்துதல், உள்ளூர் வணிகர்களை ஆதரித்தல் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுப்பது போன்றவை ஷிவானி ராஜாவின் வாக்குறுதிகளாக உள்ளன.

கடந்த 1994-ல் லீசெஸ்டர் நகரில் அவர் பிறந்துள்ளார். அவரது பெற்றோர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இளநிலை பட்டம் முடித்துள்ளார். இங்கிலாந்தில் உள்ள முக்கிய அழகுசாதனப் பிராண்டுகளுடன் இணைந்து பாணியாற்றியவர். தனது குடும்பத்தின் ஹோட்டல் தொழிலையும் கவனித்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE