காசாவில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல்

By செய்திப்பிரிவு

டெல் அவில்: காசா நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி முகமையின் (UNRWA) தலைமையகத்தை இஸ்ரேல் தாக்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடந்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹமாஸ் - இஸ்ரேல் போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், காசா நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி முகமையின் (UNRWA) தலைமையகத்தை இஸ்ரேல் தாக்கியுள்ளது. ஹமாஸுக்கு சொந்தமான போர் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் இந்த தலைமையகத்தில் இருந்ததால் தாக்குதல் நடந்தியதாக இஸ்ரேலிய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

காசா முழுவதும் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருக்கும் நிலையில், உணவு, தண்ணீர் மற்றும் பொருட்களை ஏற்றிச் சென்ற நூற்றுக்கணக்கான டிரக்குகள் எகிப்திய சாலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கிட்டதட்ட இரண்டு மாதங்களாக காசாவுக்கு மனிதாபிமான பொருட்களை வழங்குவதற்கான அனுமதிக்காக காத்திருக்கின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி முதல் சிகிச்சை பலனின்றி 436 புற்றுநோயாளிகள் உயிரிழந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரம் எகிப்து மற்றும் கத்தாரில் மத்தியஸ்த போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 38,193 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 87,903 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களால் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 என மதிப்பிடப்பட்டுள்ளது, ஆயிரக்கணக்கான மக்கள் காசாவில் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். காசா நகரில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது இரண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE