உள்நாட்டு யுத்தத்தின்போது மாயமானவர்கள் கதி என்ன? - இலங்கை அரசுக்கு ஐ.நா. சபை பரிந்துரை: தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா?

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: இலங்கையில் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியின்போது உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அப்போது, அரசையும், தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதையும் எதிர்த்து கருத்துகளை வெளியிட்டோர், மனிதஉரிமை ஆர்வலர்கள், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகியோர் என பலரும் மாயமானார்கள்.

இதுவரை அவர்கள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ அல்லது இறந்ததாகவோ உறுதி செய்யப்படவில்லை. அவர்களது உறவினர்கள் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு மாவட்டங்கள் மற்றும் தலைநகர் கொழும்பிலும் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவில் சுழற்சி முறையிலான 2,645-வது நாள் கவன ஈர்ப்புப் போராட்டம் நேற்று நடைபெற்றது.

இலங்கையில் 1983 முதல் 2009 வரை 1.40 லட்சம் பேர் காணாமல் போயிருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம், காணாமல் போனவர்கள் தொடர்பாக இலங்கை அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: காணாமல் போனவர்களுக்கான இழப்பீடு அலுவலகம் உள்ளிட்டவற்றை இலங்கை அரசு அமைத்திருந்தாலும், அவர்களது நிலை,இருப்பிடம் குறித்த தகவல்களை அறிய முடியாத நிலை தொடர்கிறது. நிச்சயம் அவர்கள் வீடுதிரும்புவர் என்று உறவினர்கள்பலரும் நம்புகின்றனர். இதனால்,மாயமானவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்யாமல் இருக்கின்றனர். இது இலங்கையின் கலாச்சார, மத நம்பிக்கையை சார்ந்த மக்கள்மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தல், விசாரணை, இருப்பிடத்தை தெளிவுபடுத்தல் உள்ளிட்டவற்றில் நம்பகமற்றத் தன்மை நிலவுகிறது.

பரிந்துரைகள்: மாயமானவர்களின் எண்ணிக்கையை அறிவிப்பதுடன், இதற்கு ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் காரணம் என்பதை ஏற்றுக்கொண்டு, இலங்கை அரசுபொது மன்னிப்பு கோர வேண்டும். இது தொடர்பான வழக்கு விசாரணைகளை தீவிரப்படுத்துவதுடன், இதுகுறித்த அரசியலமைப்பு மற்றும் சட்ட சீர்திருத்தங்களை விரைவுபடுத்த வேண்டும்.

மனித உரிமைகள், சட்டமீறல்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள சிறப்பு நீதிமன்றத்தை நிறுவ வேண்டும். காணாமல் போனோருக்கான அலுவலகத்தை மேம்படுத்த வேண்டும். சிறந்த முறையில் விசாரணை மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

மனித உரிமைகளுக்காகப் போராடுவோருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களை நிறுத்த வேண்டும். காணாமல் ஆக்கப்படுதல் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் அதிபர் தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அரசு ஐ.நா. பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டால், மாயமானோரின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE