காசா: இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், ரஃபாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐநா-வில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அவர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அவர் பெயர் வைபவ் அனில் காலே.
காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசாவில் புகுந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதன் அடுத்தகட்டமாக காசாவின் தெற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரான ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருந்தது.
ரஃபா மீது இஸ்ரேல் முதற்கட்ட தாக்குதலைத் தொடங்கிவிட்டது, இதற்கிடையே ஐநா பாதுகாப்புத் துறையில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர் பயணித்த வாகனம் ரஃபாவில் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அதில் அவர் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. உயிரிழந்த அந்த நபரின் பெயர் வைபவ் அனில் காலே. இந்திய ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். 46 வயதாகும் அவர், கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.
அவரது குடும்பமே, ராணுவ குடும்பம். அவரது சகோதரர், உறவினர்கள் அனைவரும் இந்திய ராணுவத்தில் தான் பணியாற்றுகின்றனர். நாக்பூரைச் சேர்ந்த இவர், 1998-ல் ராணுவத்தில் இணைந்து பல்வேறு பிரிவுகளில், காஷ்மீர், சியாச்சின் போன்ற பல்வேறு இடங்களில் பணிபுரிந்துள்ளார்.
» ராஜஸ்தான் சுரங்க விபத்தில் ஒருவர் பலி; 14 பேர் பத்திரமாக மீட்பு
» 4 கட்ட தேர்தலுக்குப் பிறகு இண்டியா கூட்டணி வலுவாக உள்ளது: மல்லிகார்ஜுன கார்கே
இந்திய ராணுவத்தில் பட்டாலியன் கமாண்டர், ரைபிள் கம்பெனி கமாண்டர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்த அவர், 2022-ல் தனது பணியில் இருந்து ஓய்வுபெற்றார். ராணுவத்தில் இருந்தபோது, கர்னல் வைபவ் 2009 - 2010 வரை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றினார். 5-6 வாரங்களுக்கு முன்புதான் ஐக்கிய நாடுகள் சபையில் பாதுகாப்பு சேவை ஒருங்கிணைப்பு அதிகாரியாக இணைந்த நிலையில், தற்போது காசா மீதான தாக்குதலில் சிக்கி உயிரை இழந்துள்ளார்.