காசாவில் வான்வழி உதவிகள் வழங்கிய போது பாராசூட் விபத்து: 5 பேர் பலி

By செய்திப்பிரிவு

காசா: பாலஸ்தீனத்தின் வடக்கு பகுதியில் வான்வழியாக மனிதாபிமான உதவிகள் வழங்கிய போது ஏற்பட்ட பாராசூட் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசா மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

"விபத்தில் காயமடைந்தவர்கள் காசாவின் அல் ஷிஃபா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கோர விபத்து கடலோரத்தில் உள்ள அல் - ஷாதி அகதிகள் முகாமுக்கு அருகில் நடந்தது" என்று மருத்துவமனையின் தலைமை செவிலியர் முகம்மது ஷேக் தெரிவித்தார்.

விபத்து குறித்து நேரில் பார்த்த சாட்சியான முகம்மது அல் கோல் கூறுகையில், "நானும் எனது சகோதரனும் மாவு பொட்டலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், வானத்தில் இருந்து கீழிறங்கிய பாராசூட்களை பின்தொடர்ந்து கொண்டிருந்தோம். அப்போது திடீரென பாராசூட்கள் திறக்காமல், அங்கிருந்த வீட்டின் கூரை மீது ராக்கெட் வேகத்தில் விழுந்தன.

பத்து நிமிடங்கள் கழித்து உதவி பொருள்கள் விழுந்த கூரை வீட்டில் இருந்து உயிரிழந்த மூன்று பேரையும், காயமடைந்தவர்களையும் இடம் மாற்றுவதை பார்த்தேன்" என்று தெரிவித்தார்.

ஐந்து மாதங்களுக்கு மேலாக போர் நீடித்துவரும் வடக்கு காசாவில் ஆயிரக்கணக்கான மக்கள் மோசமான நிலையில் உள்ளனர். இந்தநிலையில் அங்குள்ளவர்களுக்கு அமெரிக்காவும், ஜோர்டானும் அங்குள்ளவர்களுக்கு வான்வழி உதவிகள் வழங்கி வருகின்றன.

இந்தநிலையில் விபத்து குறித்து ஜோர்டான் ராணுவம் கூறுகையில், காசாவில் வான்வழியாக உதவிகள் வழங்கிய போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாராசூட் திறக்காமல் கீழே விழுந்து ஏற்பட்ட விபத்து ஜோர்டான் விமானத்தில் இருந்து நடக்கவில்லை

மற்ற ஐந்து நாடுகளுடன் இணைந்து ஜோர்டானின் நான்கு விமானங்கள் மேற்கொண்ட உதவிகள் வழங்குவதற்கான பயணம் தடங்கள் ஏதும் இல்லாமல் நடந்தன" என்று தெரிவித்தனர்.

ஐந்து பேர் கொல்லப்பட்ட பாராசூட் விபத்து குறித்து காசாவில் உள்ள ஹமாஸ்களின் அரசு ஊடக அதிகாரி ஒருவர் கூறுகையில், "வான்வழியாக உதவிகள் வழங்குவது "பயனற்றவை" என்றும், "உதவிகள் வழங்குவதற்கு சிறந்த வழி இல்லை" என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, வான்வழியாக உதவிகள் வழங்குவதோ அல்லது கடல்வழியாக உதவிகள் வழங்குவதோ காசாவுக்கு தரைவழியாக உதவிகள் வழங்குவதற்கான மாற்றாக இருக்க முடியாது என்றும் எல்லை வழியாக லாரிகள் மூலம் உதவிகள் வழங்கப்படுவதை அனுமதி வழங்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE