இஸ்ரேல் போர் - ‘காசாவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 63 பெண்கள் உயிரிழப்பு’

By செய்திப்பிரிவு

காசா: காசாவில் ஒரே இரவில் இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 63 பெண்கள் கொல்லப்படுகிறார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்திய எட்டு தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் காசாவில் ஒரே இரவில் இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், காசாவுக்குள் கூடுதல் உதவிகளை அனுமதிக்க வேண்டும், அப்பாவிகளின் உயிர்களைப் பாதுகாப்பது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார்.

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம், மகளிர் தினத்தன்று காசாவில் பாலஸ்தீனப் பெண்களின் அவலநிலை குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது வரை 9,000 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கின்றனர்.

காசாவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 63 பெண்கள் கொல்லப்படுகிறார்கள் எனக் கூறப்படுகிறது. காசாவில் பலி எண்ணிக்கை 30,878 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 72,402 ஆக உயர்ந்துள்ளது. இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE