மேற்கு வங்க நடன கலைஞர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை: விசாரணை நடைபெறுவதாக இந்திய துணைத் தூதரகம் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமெரிக்காவில் மேற்கு வங்க நடனக் கலைஞர் அமர்நாத் கோஷ் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அங்குள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் சுரி நகரைச் சேர்ந்தவர் அமர்நாத் கோஷ். பரத நாட்டியம், குச்சிப்புடி நடனக் கலைஞரான இவர், அமெரிக்காவில் பிஎச்டி படித்து வந்துள்ளார். இந்நிலையில், மிசவுரி மாகாணம் செயின்ட் லூயிஸ்நகரில் கடந்த பிப்ரவரி 27-ம் தேதிநடைப் பயிற்சி மேற்கொண்டகோஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

எனினும் இந்த சம்பவம் மும்பையைச் சேர்ந்த நடிகர் தேவோலீனா பட்டாச்சார்ஜி தனது எக்ஸ் தளத்தில் மார்ச் 1-ம் தேதி பதிவிட்ட பிறகே தெரியவந்துள்ளது. அவர் தனது பதிவில், “என் நண்பர் அமர்நாத் கோஷ் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் மர்ம நபர்களால் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். குடும்பத்தின் ஒரே பிள்ளையான அவர், 3 ஆண்டுக்கு முன்பு தனதுதாயை இழந்தார்” என கூறியுள்ளார்.

இதையடுத்து, அமர்நாத் கொல்லப்பட்ட விவகாரத்தில் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என பிரதமர் அலுவலகம், மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் அமெரிக்க தூதரகத்துக்கு சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து சிகாகோ நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம்எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “மிசவுரி மாகாணத்தில் அமர்நாத் கொல்லப்பட்டது தொடர்பாக அவரது குடும்பத்தினர் மற்றும்நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விவகாரத்தில் தடயவியல்நிபுணர்கள் மற்றும் போலீஸாரின்உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது” என கூறப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களில் மட்டும்வெவ்வேறு சம்பவங்களில் 5இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE