அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது கொடூரத் தாக்குதல்: அவசர விசா கோரி குடும்பத்தினர் அரசுக்கு வேண்டுகோள் 

By செய்திப்பிரிவு

சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோவில் படித்துவரும் இந்திய மாணவர் ஒருவர் கொள்ளையர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு, இரத்தக் காயங்களுடன் உதவிக்காக கெஞ்சும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள தாக்குதலுக்குள்ளான மாணவரின் குடும்பத்தினர், அவரைச் சந்திக்க அவசர விசா வழங்கும்படி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சையது மசாகிர் அலி. இவர் அமெரிக்காவின் சிகாகோவிலுள்ள இண்டியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்துவருகிறார். இவர் மூக்கு மற்றும் வாயில் ரத்தம் ஒழுக உதவி கோரும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இத்தாக்குதல் குறித்து வெளியாகியிருக்கும் சிசிடிவி வீடியோவில் சையதை சிகாகோவிலுள்ள அவரது வீட்டு அருகில் மூன்று பேர் தாக்குகின்றனர். இரத்தம் ஒழுக அவர் உதவி கேட்கும் வீடியோவில், “நான் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த போது நான்கு பேர் என்னைத் தாக்கினர். என் வீட்டுக்கு அருகே நான் தடுமாறி விழுந்தேன். அவர்கள் என்னை உதைத்து தாக்கினர், தயவுசெய்து உதவுங்கள் சகோ, தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ குறித்து இந்தியாவில் உள்ள அவருடைய குடும்பத்தினர் மிகவும் கவலை அடைந்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான சையதுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யவும், அவரைச் சந்திக்க அமெரிக்கா செல்ல உதவும் படி மத்திய அரசுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளனர். இதுகுறித்து சையதுவின் மனைவி, சையதா ருகுலியா பாத்திமா ரிஸ்வி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடித்தில்,"அமெரிக்காவின் சிக்காகோவில் உள்ள எனது கணவரின் பாதுக்காப்பு குறித்து நான் மிகவும் கவலையடைந்து உள்ளேன். அவருக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்கவும், சாத்தியம் என்றால் என் கணவருடன் இருப்பதற்காக என்னுடயை மூன்று குழந்தைகளுடன் நான் அமெரிக்கா செல்வதற்கு உதவும்படியும் வேண்டிக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இந்தாண்டில் இதுவரை நான்கு இந்திய வம்சாவளி மாணவர்கள் இறந்த நிலையில், சையது மீதான் இந்த தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது, முன்னதாக, அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருந்த 19 வயதான இந்திய மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த வாரத்தின் தொடக்கத்தில் இந்திய மாணவரான நீல் ஆச்சாரியா, பர்டூ பல்கலை., வளாகத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரைக் காணவில்லை, கண்டுபிடிக்க உதவுங்கள் என மாணவரின் தாயார் வேண்டுகோள்விடுத்த அடுத்த நாள் இத்துயரச் சம்பவம் நடந்தது.

ஜன.16ம் தேதி ஹரியானாவைச் சேர்ந்த விவேக் சைனி என்ற 25 வயது மாணவர் ஜார்ஜியாவின் லிதோனியாவில் வீடில்லாத ஒருவரால் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டார். அதே ஜன.மாதம், இல்லினோய்ஸ் அர்பானா சாம்பெய்ன் பல்கலைக்கழகத்துக்கு வெளியே மற்றொரு இந்திய மாணவரான அகுல் தவான் இறந்து கிடந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE