பாகிஸ்தானில் நெருங்கும் தேர்தல் | காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 10 போலீஸார் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

லக்னோ: வடக்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். திங்கள்கிழமை அதிகாலை நடந்த இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 10 போலீஸார் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் வருகிற 8-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதையொட்டி, பாகிஸ்தானில் வன்முறை சம்பவங்களும், குண்டு வெடிப்புகளும் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் கானில் உள்ள சோட்வான் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் காவல் நிலையத்தில் இருந்த 10 போலீஸார் உயிரிழந்தனர், 6 பேர் காயமடைந்தனர் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதிகள் கடுமையான ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. காவல் நிலையத்தை சுற்றி வளைத்து கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர். அதாவது, 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மூன்று திசைகளில் இருந்து தாக்குதல் நடத்தினர் என்றும் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக துப்பாக்கிச் சண்டை நடந்தது என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கைபர் பக்துன்க்வா பகுதி மற்றும் பலுசிஸ்தானில் கடந்த சில நாட்களாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE