ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 24 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: இஸ்ரேல் தகவல்

By செய்திப்பிரிவு

டெல் அவிவ்: மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் 24 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை காசா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போருக்கும் இன்னும் முடிவு காணப்படவில்லை. இந்நிலையில், மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் வெடிபொருள்களை தயார் செய்துகொண்டிருந்த போது, ஹமாஸ் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள், அவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் 24 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 3 மாதமாக நடந்துவரும் போரில், இது மிகவும் மோசமான தாக்குதல் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

24 இஸ்ரேல் ராணுவத்தினர் கொல்லப்பட்ட பின்னர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு “போர் தொடங்கியதில் இருந்து, இந்த நாள் மிக கடினமான நாட்களில் ஒன்று. முழுமையான வெற்றி கிடைக்கும் வரை நாங்கள் போராடுவதை நிறுத்த மாட்டோம்” என்று கூறியுள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்க் பகுதியில் இரவோடு இரவாக இருபதுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் அக்டோபர் 7 முதல் கைது செய்யப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 6,220 ஆக உயர்ந்துள்ளது. அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 25,490 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 63,000 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE