பிரபல ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் தனது நெருங்கிய நண்பரை மணந்தார்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓவான சாம் ஆல்ட்மேன் தனது நெருங்கிய நண்பரான ஆலிவர் முல்ஹெரினை (Oliver Mulherin) திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓவாக சாம் ஆல்ட்மேன் செயல்பட்டு வருகிறார். அண்மையில் அவர் அந்த நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அந்த நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்நிலையில், அவர் மீண்டும் அந்த பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டார். தற்போது, ஆல்ட்மேன் தனது நெருங்கிய நண்பரான ஆலிவர் முல்ஹெரினை (38 வயது) நேற்று திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். ஹவாயில் இந்த திருமண விழா மிகவும் எளிமையான முறையில் நடந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆலிவர் முல்ஹெரின் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஆவார். இவர் மென்பொருள் துறையில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். Meta, Broadwing, SPARK Neuro மற்றும் IOTA Foundation ஆகிய நிறுவனங்களிலும் பணியாற்றி இருக்கிறார். தற்போது ஐஓடி (IoT) எனும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் துறையில் நிபுணத்துவம் பெற்று விளங்குகிறார்.

கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அங்கு முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் சத்யா நாதெல்லா, சுந்தர் பிச்சை உள்பட பலர் பங்கேற்றனர். இதில் சாம் ஆல்ட்மேன்-ஆலிவர் முல்ஹெரினும் பங்கேற்றது கவனம் பெற்றது. அப்போது தங்களது திருமண விருப்பத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதோடு, சாம் ஆல்ட்மேன் செப்டம்பர் 2023 இல் நியூயார்க் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தானும் முல்ஹெரினும் விரைவில் குழந்தைகளைப் பெற விரும்புவதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது, சாம் ஆல்ட்மேனுடன் திருமணத்தின்போது எடுத்துக் கொண்டே போட்டோவை ஆலிவர் முல்ஹெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‛‛எனது சிறந்த நண்பரையும், என் வாழ்க்கையின் காதலையும் திருமணம் செய்து கொண்டேன்'' என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE