புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் 2:50 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு, டெல்லி வரை உணரப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியுற்றனர்.
நிலநடுக்கத்துக்கான தேசிய மையத்தின் தகவல்படி, ஆப்கானிஸ்தானில் இன்று வியாழக்கிழமை மதியம் 2:50 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் டெல்லி, காசியாபாத், நொய்டா, பரிதாபாத், குருகிராம், காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 என பதிவாகியுள்ளது.
இந்தியா மட்டும் இன்றி பாகிஸ்தானில் உள்ள சில நகரங்களிலும், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் நகரிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை.
சமீப காலமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு புத்தாண்டு நாளில் ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்களால் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.