மாலே: பிரதமர் நரேந்திர மோடி குறித்த தரக்குறைவான கருத்துகள் மாலத்தீவு அரசின் குறுகிய பார்வையை வெளிப்படுத்துவதாக அந்நாட்டு முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மரியா அகமது திதி தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா எங்களுக்கு தேவைப்படும் காலங்களில் வந்து உதவும் ‘911’ அவசர எண் போன்ற ஆபத்பாந்தவன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாலத்தீவு முன்னாள் அமைச்சர் மரியா அகமது திதி இந்தியாவுடனான முந்தைய நட்பை நினைவுகூர்கையில், “பிரதமர் மோடி மீதான விமர்சனங்கள் தற்போதைய மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகியப் பார்வையை வெளிப்படுத்துகிறது. மாலத்தீவு அனைவருடனும் நட்புணர்வுடன் இருக்கும் ஒரு சிறிய நாடு. இந்தியாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதை நாம் மறுக்க முடியாது. அதேபோல் பாதுகாப்பு விவகாரங்களிலும் தொடர்பில் இருக்கிறோம். அவர்கள் பாதுகாப்புத்துறையில் நமக்கு உதவுகிறார்கள், ராணுவத் தளவாடங்களை வழங்குகிறார்கள், பாதுகாப்புத்துறையில் நாங்கள் தன்னிறைவு பெற உதவி வருகிறார்கள். இந்தியாவுடன் எப்போதும் பேணி வரும் பழைய உறவுகளை தற்போது பேண முடியாது என்று நினைப்பது தற்போதிருக்கும் அரசின் குறுகிய பார்வையையே காட்டுகிறது.
இந்தியா எங்களுடயை அவசர கால ஆபத்பாந்தவன். எங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் நாங்கள் அவர்களை அழைக்கிறோம். அவர்களும் வந்து எங்களைக் காக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்தியா எங்களின் அவசரகால நண்பன். நண்பர்களைப் பற்றி இதுபோன்ற கருத்துக்களைக் கூறுவது அனைவருக்கும் வருத்தமளிப்பதாக உள்ளது.
நெருங்கிய நண்பர்களாக, அண்டை நாடாக, சர்வதேச சமூகத்தின் அங்கமாக நாம் சர்வதேச கடமைகளை கடைபிடிப்போம். எல்லோருடனும் நட்பு கொள்ளும் நமது பாரம்பரிய வெளியுறவுக் கொள்கைகளை கடைபிடிப்போம். இந்தியாவே நமக்கு முதன்மையான நட்பு நாடு. இப்போதைய அரசும் இதையே செய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
» “இந்தியா உடனான உறவு மிக நெருக்கமானது” - வங்கதேச பிரதமராக மீண்டும் தேர்வான ஷேக் ஹசீனா நெகிழ்ச்சி
» ‘இந்தியாவை புறக்கணிக்குமாறு மாலத்தீவிடம் கூறவில்லை’ - சீன அரசு பத்திரிகை தகவல்
சில நோய்களுக்கான சிகிச்சைகளுக்கான வசதி எங்களிடம் இல்லை. கோவிட் கால கட்டத்தில் இந்தியாவின் உதவியின் கீழ் நாங்கள் தடுப்பூசிகளைப் பெற்றோம். இரு நாடுகளுக்கும் இடையிலும் பெரிய அளவில் ஒத்துழைப்பு உள்ளது. பழங்காலத்தில் இருந்தே ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். இப்போது நமது நட்பு நாட்டை மாற்றுவது என்ற எண்ணத்தை நினைத்துப் பார்க்க முடியாது.
பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக தீவில் இருந்து எங்கள் மக்களை மாலேக்கு கொண்டு வருவதற்கு இந்தியா வழங்கியுள்ள தொழில்நுட்ப உதவி முற்றிலும் மனிதாபிமான அடிப்படையிலானது. மாலத்தீவுக்கு இந்தியா அளித்துள்ள உபகரணங்கள் எங்களுக்கு எப்போதும் உதவியாக இருக்கும்". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ம் தேதி அரசு முறை பயணமாக லட்சத் தீவு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள கடற்கையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அவர்சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அத்துடன் “சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பிரதமரின் பயணம் காரணமாக இரண்டு நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத் தீவு தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் மாலத்தீவு துணை அமைச்சர்கள் மரியம்ஷியுனா, அப்துல்லா மஹ்சூம் மஜித், மால்ஷா ஷெரீப் ஆகியோர்பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். குறிப்பாக, மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத்தீவை மிகப்பெரிய சுற்றுலா தலமாகமாற்ற பிரதமர் மோடி முயற்சி செய்கிறார் என்று குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் குறித்து மாலத்தீவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றனர்.
இதனிடையே, இந்த கருத்துகளுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்த இந்தியாவின் முக்கிய பிரபலங்கள், மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதற்கு பதில் உள்நாட்டில் உள்ள மாற்று இடங்களை பரிசீலிக்க வேண்டும் என்று இந்தியர்களுக்கு கோரிக்கை வைத்தனர். இதனால் ஏற்கெனவே மாலத்தீவு செல்ல திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கானோர் தங்கள் விமான டிக்கெட் மற்றும் ஓட்டல் அறை முன்பதிவுகளை ரத்து செய்தனர்.
இதையடுத்து, “வெளிநாட்டு தலைவர்கள் மீது அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவை அவர்களின் தனிப்பட்ட கருத்து” என மாலத்தீவு அரசு சார்பில் நேற்று முன்தினம் விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன் 3 மாலத்தீவு அமைச்சர்களின் பதவியும் தற்காலிகமாக பறிக்கப்பட்டது.