இந்தியா பலமுறை உதவிகள் செய்தும் மாலத்தீவு தலைவர்களின் வெறுப்புக்கு காரணம் என்ன?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஒரு காலத்தில் மாலத்தீவுகள் தமிழ்நாட்டின் சோழ மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த தீவுகள் பின்னர் சிங்களவர்களின் ஆட்சிக்கு மாறியது. கடந்த 1153-ல் மாலத்தீவில் முஸ்லிம் மதம் பரவியது. கடந்த 1558-ல் போர்ச்சுகல், 1654-ல் நெதர்லாந்தின் காலனி நாடாக இருந்த மாலத் தீவு கடந்த 1887-ல் பிரிட்டனின் காலனி நாடாக மாறியது.

கடந்த 1965-ம் ஆண்டில் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. கடந்த 1968-ம் ஆண்டில் சுல்தான் ஆட்சியில் இருந்து குடியரசு நாடாக மாறியது. அப்போது முதல் ஜனநாயக முறைப்படி அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த வரிசையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் மாலத்தீவு அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் மக்கள் தேசிய காங்கிரஸ் தலைவர் முகமது முய்சு புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவர் சீனாவின் ஆதரவாளர் ஆவார். கடந்த நவம்பரில் அவர் ஆட்சிப் பொறுப்பேற்றார். அப்போதுமுதல் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

ஒப்பந்தம் மறுபரிசீலனை: மாலத்தீவில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவம் வெளியேற வேண்டும். இந்தியாவுடன் ஏற்கெனவே செய்த 100 ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று புதிய அதிபர் முகமது முய்சு வலியுறுத்தி வருகிறார்.

அதிபராக பொறுப்பேற்ற பிறகு அவர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக சீனாவுக்கு இன்று செல்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசும் அவர் பல்வேறு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் மாலத்தீவு முழுமையாக இணைவது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இது இந்தியாவின் நலனுக்கு எதிரானது என்பதால் மாலத்தீவின் செயல்பாடுகளை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

நன்றி மறந்த மாலத்தீவு: மாலத்தீவை சுதந்திர நாடாக அங்கீகரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். கடந்த 1988-ம் ஆண்டில் மாலத்தீவில் கலவரம் ஏற்பட்டது. அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி ராணுவத்தை அனுப்பி அன்றைய அதிபர் அப்துல் கயூமின் அரசை காப்பாற்றினார்.

கடந்த 2018-ம் ஆண்டில் மாலத்தீவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி சரக்கு கப்பல்களில் மாலத்தீவுக்கு தேவையான குடி நீரை அனுப்பி வைத்தார். மாலத்தீவு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவும் மோடி அரசு தாராளமாக கடன் உதவிகளை வழங்கியது. மாலத்தீவுக்கு 2 ஹெலிகாப்டர்கள், ஒரு விமானத்தையும் இந்தியா பரிசாக வழங்கியது. நன்றி மறந்த மாலத்தீவு தற்போது சீனாவின் பக்கம் சாய்கிறது. இந்தியா மீதும் வெறுப்புணர்வை உமிழ்கிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

மாலத்தீவின் 3 அமைச்சர்கள் நீக்கம்: முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2, 3-ம் தேதிகளில் அரசுமுறை பயணமாக லட்சத் தீவு சென்றிருந்தார். அந்த பயணத்தின் புகைப்படங்கள், வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதோடு அவர் வெளியிட்ட பதிவுகளில், “லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும் அங்கு வாழும் மக்களின் அரவணைப்பையும் கண்டு பிரமிக்கிறேன். அகத்தி, பங்காராம், கரவெட்டி ஆகிய இடங்களில் மக்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி.

சாகச சுற்றுலா பயணத்தை விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம். நான் ஸ்நோர்கெலிங் பொழுதுபோக்கில் ஈடுபட்டேன். கவச உடையில் நீருக்கடியில் மூழ்கியது புதிய அனுபவமாக இருந்தது" என்று தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி சமூகவலைதளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் வைரலாக பரவின. பிரதமரின் பயணம் காரணமாக கடந்த 2 நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத் தீவு தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுலாத் துறையை நம்பி வாழும் இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு அதிர்ச்சி அடைந்தது.

இதன் தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த மாலத்தீவின் 3 அமைச்சர்கள் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அதன் விவரம் > லட்சத்தீவு கடற்கரைக்கு சென்று வந்த பிறகு பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனம்: மாலத்தீவின் 3 அமைச்சர்கள் நீக்கம்

பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்கள், இந்தியாவை அவதூறாக விமர்சித்த மாலத்தீவை புறக்கணியுங்கள் என்று சமூக வலைதளங்கள் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதை ஏற்று நேற்று ஒரே நாளில் மாலத்தீவு ஓட்டல்களில் 7,500 முன்பதிவுகளை இந்தியர்கள் ரத்து செய்தனர். மாலத்தீவு செல்லும் விமானங்களில் 2,300 டிக்கெட்டுகளையும் இந்திய சுற்றுலா பயணிகள் ரத்து செய்தனர். அதோடு மாலத்தீவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரபல நடிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE