அமெரிக்காவில் மசூதிக்கு வெளியே இமாம் சுட்டுக் கொலை: குற்றவாளியை தேடும் போலீஸ்

By செய்திப்பிரிவு

நியூஆர்க்: அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் மசூதிக்கு வெளியே முஸ்லிம் இமாம் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச்சென்ற குற்றவாளியை தேடும் பணி நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நியூஜெர்ஸி மாகாணத்தின் முக்கிய நகரமாக விளங்குவது நியூயார்க். இங்கு இஸ்லாமியர்கள் கணிசமான அளவில் வசிக்கின்றனர். இங்கு அமைந்துள்ள மஸ்ஜித் முஹம்மத் என்ற மசூதியில் ஹஸன் ஷரீஃப் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக இமாம் (இஸ்லாமிய மதகுரு) ஆக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று (ஜன 03) அதிகாலை தொழுகையை முடித்துவிட்டு மசூதியை விட்டு வெளியே வந்த ஹஸன் ஷரீஃப், தனது காரில் ஏறி அமர்ந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், தனது கையில் இருந்த துப்பாக்கியால் காருக்குள் இருந்த ஹஸனை நோக்கி பலமுறை சுட்டுள்ளார்.

துப்பாக்கிச் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த ஹஸன் ஷரீஃபை மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பித்துச் சென்ற குற்றவாளியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இந்த சம்பவத்துக்கு காரணம் முன்விரோதமா அல்லது இஸ்லாமிய வெறுப்பா என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE