காலிஸ்தான் ஆதரவாளர் லக்பீர் சிங் லண்டாவை பயங்கரவாதியாக அறிவித்தது மத்திய உள்துறை அமைச்சகம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கனடா வாழ் காலிஸ்தான் ஆதரவாளர் லக்பீர் சிங் லண்டாவை மத்திய உள்துறை அமைச்சர் பயங்கரவாதியாக அறிவித்தது.

33 வயதான லக்பீர் சிங் லண்டா தடை செய்யப்பட்ட காலிஸ்தானி இயக்கத்தின் பாபர் கல்சா இண்டர்நேஷனல் அமைப்பைச் சேர்ந்தவர். இவர் மொஹாலியில் கடந்த 2021 ஆம் ஆண்டு பஞ்சாப் காவல்துறை தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையவராவார். அதேபோல் கடந்த டிசம்பர் 2022ல் சர்ஹாலி காவல்நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலும் இவருக்குத் தொடர்புள்ளதாகத் தெரிகிறது.

பஞ்சாப்பைச் சேர்ந்த லண்டா கடந்த சில ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்து வருகிறார். அங்கிருந்து இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களைத் தீட்டி வருவதாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் பஞ்சாப் போலீஸார் லண்டாவுக்கு தொடர்புடைய 48 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனைக்கு முந்தைய நாள் லண்டாவின் ஆதராவளர் என்று கூறிய நபர் ஒருவர் பஞ்சாப் வாழ் வணிகரிடம் ரூ.15 லட்சம் கேட்டு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்தார். அதனைத் தொடர்ந்து அந்த நபர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் அடுத்தநாளே பல்வேறு இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர். சிலர் கைதும் செய்யப்பட்டனர். இந்நிலையில் லக்பீர் சிங் லண்டாவை தற்போது பயங்கரவாதியாக அறிவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

காலிஸ்தான் - கனடா சர்ச்சை: இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தினர்.

காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர் என அவர்களின் போட்டோக்களுடன் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டினர்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "இந்திய அரசாங்க முகவர்களுக்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலைக்கும் தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளன. " என்று கூறினார். இதனை இந்தியா அபத்தமானது என்றும் உள்நோக்கம் கொண்டது என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரிகையை கனடா வெளியேற்றிய நிலையில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவுக்கான கனடா தூதரை வெளியேறும்படி இந்தியா கூறியது. இவ்வாறாக மாறி மாறி குற்றச்சாட்டுகளோடு காலிஸ்தான் சர்ச்சையால் கனடா - இந்தியா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE