காத்மாண்டு: பாலியல் வழக்கில் நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே குற்றவாளி என காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவரது தண்டனை விவரம் விரைவில் வெளிவரும் என தெரிகிறது.
23 வயதான சந்தீப் லாமிச்சானே மீது கடந்த ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. 17 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்தார் என்பது தான் அவர் மீதான குற்றச்சாட்டு. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த விவகாரம் தொடர்பாக அவரை கைது செய்வதற்கான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. நேபாள கிரிக்கெட் சங்கம் அவரை இடைநீக்கம் செய்தது. கடந்த ஜனவரியில் அவர் பிணையில் வெளிவந்தார்.
இந்நிலையில், சந்தீப் லாமிச்சானே வழக்கு காத்மாண்டு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் குற்றவாளி என்பது தெரியவந்தது. அதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பு வெளிவந்த தினத்தன்று நேபாள புரோ கிளப் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் மீதான குற்றச்சாட்டை அவர் தொடர்ந்து மறுத்து வந்தார். அவர் பிணையில் வந்தவுடன் நேபாள அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஆசிய கோப்பை மற்றும், உலகக் கோப்பை குவாலிபையர் தொடரிலும் விளையாடி வந்தார். சுமார் ஓராண்டு காலம் அவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து வந்தது. சர்வதேச தொடரில் விளையாடிய போது ஸ்காட்லாந்து வீரர்கள் அவருடன் கை குலுக்க மறுத்தனர்.