பாரிஸ்: துபாயில் இருந்து நிகரகுவா நாட்டுக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப காரணங்களுக்காக பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. சுமார் 300 பயணிகள் பயணிக்கும் இந்த விமானத்தில் இந்தியர்கள் அதிகம் இருப்பதாக தகவல். இதனை பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
அதே நேரத்தில் கடத்தல் சார்ந்த சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அதுகுறித்து பிரான்ஸ் அதிகாரிகள் விசாரித்து வருவதாக சொல்லப்படுகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Vatry விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல். இதனை அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
“துபாயிலிருந்து 303 பேருடன் நிகரகுவாவுக்குச் சென்ற விமானம் பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் தொழில்நுட்ப காரணங்களுக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரெஞ்சு அதிகாரிகள் எங்களுக்குத் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்து கள நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். பயணிகளின் நலனை உறுதி செய்வோம்” என பாரிஸில் உள்ள இந்திய தூதரகம் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளது.