அரசு ரகசியங்களை கசியவிட்டதாக வழக்கு | பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன்

By செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்: அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் வழக்கு நிரூபணமானதை அடுத்து கடந்த ஆகஸ்ட் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது, அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் ஜாமீன் கோரி அவரது தரப்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரோஷி சார்பிலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சர்தார் தாரிக் மசூத், அதார் மினால்லா, சையத் மன்சூர் அலி ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதன்படி, இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருவரும் தலா ரூ.10 லட்சம் பிணைத் தொகை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ள போதிலும் இம்ரான் கான் விடுவிக்கப்படுவது சந்தேகமே என அவரது வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். இம்ரான் கான் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர் விடுவிக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE