மானுடர்களுக்கு செவ்வாய் கிரகத்தில் நகரங்கள் இருக்க வேண்டும்: எலான் மஸ்க்

By செய்திப்பிரிவு

சான் பிரான்சிஸ்கோ: மானுடர்களுக்கு செவ்வாய் கிரகத்தில் நகரங்கள் இருக்க வேண்டும் என எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மனிதர்கள் செவ்வாய் கிரகத்துக்கு செல்வது குறித்து பல்வேறு தருணங்களில் மஸ்க் பேசி உள்ளார். இந்நிலையில், தற்போது மீண்டும் எக்ஸ் தளத்தில் அது குறித்து ட்வீட் செய்துள்ளார்.

பூமியை கடந்து பிற கோள்களில் பல்வேறு ஆராய்ச்சி பணிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் செவ்வாய் கிரகத்தில் பெரும்பாலான நாடுகளுக்கு ஒரு கண் உள்ளது. குறிப்பாக அங்கு மனிதர்கள் உயிர் வாழக்கூடிய சாத்தியம் உள்ளதா என்பது குறித்த ஆராய்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அதே நேரத்தில் மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் சாத்தியம் குறித்து பேசி வருகிறது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கு நகரம் வேண்டும் என மஸ்க் ட்வீட் செய்துள்ளார். “மனிதர்கள் நிலவில் தரையிறங்கி 66 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக மனிதர்கள் நிலவில் தரையிறங்கி அரை நூற்றாண்டு காலம் கடந்துவிட்டது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இது மனித நாகரிகத்தின் உயர்ந்த அடையாளமாக இருக்க முடியாது.

மானுடர்களுக்கு நிலவில் பேஸ் (மூன் பேஸ்) இருக்க வேண்டும், செவ்வாய் கிரகத்தில் நகரங்கள் இருக்க வேண்டும். மனிதர்கள் நட்சத்திரங்களுக்கு இடையே இருக்க வேண்டும்” என மஸ்க் தெரிவித்துள்ளார். கடந்த 1903-ல் ரைட் சகோதரர்கள் விமானத்தில் முதல் முறையாக பறந்தது குறித்த ட்வீட் ஒன்றுக்கு மஸ்க், இப்படி பதில் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE