ஐ.நா. சபை பருவநிலை மாநாட்டில் மேடைக்கு அழைக்கப்பட்ட ஒரே தலைவர் நரேந்திர மோடி

By செய்திப்பிரிவு

துபாய்: ஐ.நா. சபை பருவநிலை மாநாட்டில் மேடைக்கு அழைக்கப்பட்டு பிரதான இருக்கையில் அமர வைக்கப்பட்ட ஒரே தலைவர் என்ற பெருமையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.

ஐ.நா. சபையின் 28-வது பருவநிலை மாறுபாடு மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. கடந்த 1-ம் தேதி நடைபெற்ற 2-வது நாள் மாநாட்டில் பிரதமர் மோடி உட்பட பல நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ, பாகிஸ்தான் பொறுப்பு பிரதமர் அன்வர் அல்-ஹக் ககார் உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று உள்ளனர்.

இந்த சூழலில் கடந்த 1-ம் தேதி நடைபெற்ற விழாவின்போது, மாநாட்டின் தலைவர் சுல்தான் அல் ஜபீர், ஐ.நா. பருவநிலை மாறுபாடு தடுப்பு செயலாளர் சைமன் உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் மேடையில் அமர இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. அப்போது பிரதமர் மோடி மேடைக்குஅழைக்கப்பட்டு பிரதான இடத்தில் அமர வைக்கப்பட்டார். வேறு உலகநாடுகளின் தலைவர்களுக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்படவில்லை.

சர்வதேச அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு உயர்ந்து வருவதையே இது காட்டுகிறது என்கின்றனர்.

சர்வதேச அரங்கில் சீனா, ரஷ்யா ஓரம் கட்டப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்ஐ.நா. பருவநிலை மாநாட்டில் பங்கேற்கவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அமெரிக்க அதிபர் ஜோபைடனும் மாநாட்டுக்கு வரவில்லை. இந்த சூழலில் துபாய் மாநாட்டில்பிரதமர் மோடி அனைத்து தலைவர்களையும் ஒன்றிணைக்கும் மையப்புள்ளியாக செயல்பட்டார். பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அவரை தனியாக சந்தித்துப் பேசினர். அவர்களில் இத்தாலி பிரதமர் மெலோனி பிரதமர் மோடியுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அவரோடு இணைந்து செல்பிபுகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில், தனது பெயரையும் (மெலோனி), மோடி பெயரையும் இணைந்து 'மெலோடி' என்று பதிவிட்டுள்ளார். இந்த 'மெலோடி' புகைப்படம் சர்வதேச அளவில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.மெலோனியின் செல்பி புகைப்படத்துக்கு பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் அளித்துள்ள பதிலில், “நண்பர்களை சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சி" என கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி பதவியேற்றார்.

அவர் பொறுப்பேற்ற பிறகு சீனாவின் கனவு திட்டமான பெல்ட்அண்ட் ரோடு திட்டத்தில் இருந்து இத்தாலி வெளியேறியது. தற்போது இந்தியாவுடன் இத்தாலி அதிக நெருக்கம் காட்டி வருகிறது. இரு நாடுகளின் தலைவர்களும் சர்வதேச அரங்கில் நல்ல நண்பர்களாக வலம் வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE