சுரிநாம் நாட்டில் தங்கச் சுரங்கத்தில் விபத்து: 10 தொழிலாளர்கள் பரிதாப பலி

By செய்திப்பிரிவு

சுரிநாம்: தெ.அமெரிக்க நாடான சுரிநாமின் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

விபத்துப் பகுதிக்கு காவல்துறை, ராணுவ அதிகாரிகள், மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். விபத்து நடந்தது நாட்டின் தென் பகுதியில். விபத்துக்குள்ளான சுரங்கம் அரசுக்கு சொந்தமானது அல்ல, சட்டபூர்வமானதும் அல்ல. மாறாக சிலர் தாமாகவே இணைந்து தங்கத்தைத் தேடி சுரங்கம் அமைத்து தங்கம் சேகரிக்க முயற்சித்துள்ளனர். அப்போது சுரங்கம் இடிந்துவிழுந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சுரிநாமில் இதுபோல் மக்களே இணைந்து தங்கம் தேடுவது வழக்கமான சட்டவிரோத நடவடிக்கையாகவே உள்ளது.

இந்நிலையில் விபத்து குறித்து அதிபர் சான் சன்டோக்கி, "சுரங்க விபத்து பற்றி தெளிவற்ற சூழலே நிலவுகிறது. முதலில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம்" என்றார். முன்னதாக பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இருந்த அதிபரிடம் விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் அங்கிருந்தவர்களிடம் 'ஒரு துயரச் சம்பவம் நடந்துவிட்டது' என்று கூறிவிட்டு ஆலோசனையை பாதியில் முடித்துக் கொண்டார்.

சுரிநாமில் உள்ள தங்கச் சுரங்கங்களில் அமெரிக்கா, கனடா நாடுகள் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன. அங்கே சமீபகாலமாக சட்டவிரோத தங்கச் சுரங்க செயல்பாடுகள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE