ஏமன் நாட்டு கொலை வழக்கு: கேரள செவிலியருக்கு மரண தண்டனை உறுதி - மத்திய அரசின் உதவியை கோரும் தாய்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஏமன் நாட்டில் செவிலியராக பணிபுரிந்த கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு, கொலை வழக்கு ஒன்றில் 2018-ம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி அவரது மேல்முறையீட்டு மனுவை ஏமன் நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து அவருக்கான மரண தண்டனை உறுதியாகியுள்ளது.

இந்தச் சூழலில், மகளை மீட்க ஏமன் நாட்டுக்கு செல்ல தன்னை அனுமதிக்க வேண்டும் என்று நிமிஷா பிரியாவின் தாயார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அவரது கோரிக்கை தொடர்பாக ஒரு வாரத்துக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த வியாழக்கிழமை டெல்லி உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

நிமிஷா பிரியா கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர். இவர் ஏமன் நாட்டில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அங்கு தலோல் அப்டோ மஹ்தி என்பவரிடம் அவரது பாஸ்போட் இருந்துள்ளது. பாஸ்போட்டை தன்னிடம் திருப்பித் தரும்படி நிமிஷா பிரியா கோரியுள்ளார். ஆனால், மஹ்தி பாஸ்போர்ட்டை வழங்கவில்லை. இந்நிலையில், மஹ்திக்கு நிமிஷா பிரியா ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தியுள்ளார். இதில் மஹ்தி இறந்துவிட்டார். இதையடுத்து 2017-ம் ஆண்டு ஏமன் போலீஸார் நிமிஷா பிரியாவை கைது செய்து சிறையில் அடைத்தது. 2018-ம் ஆண்டு ஏமன் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை அறிவித்தது.

“மஹ்தி என் பாஸ்போர்ட்டை அபகரித்து, என்னை உடல்ரீதியாக துன்புறுத்தினார். அவரிடமிருந்து என் பாஸ்போட்டை மீட்கவே அவருக்கு மயக்க மருந்து செலுத்தினேன். அவரை கொலை செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்துவிட்டார்” என்று நிமிஷா பிரியா தெரிவித்தார்.

தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அவர் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை ஏமன் நாட்டு நீதிமன்றம் கடந்த 13-ம் தேதி தள்ளுபடி செய்தது.

இதனிடையே தன் மகளை மீட்க ஏமன் நாட்டுக்குச் செல்லும் முயற்சியில் நிமிஷா பிரியாவின் தாயார் இறங்கினார். மஹ்தியின் குடும்பத்தைச் சந்தித்து சமரசம் பேசி, அவரது இறப்புக்கு இழப்பீட்டு தொகை வழங்கும் முயற்சியை நிமிஷா பிரியாவின் தயார் மேற்கொண்டு வருகிறார்.

ஏமனில் நடந்துவரும் உள்நாட்டுக் கிளர்ச்சி காரணமாக அங்கு இந்தியர்கள் செல்ல கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தடை நிலவுகிறது. இதனால், நிமிஷாவின் தயாரால் ஏமனுக்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில், இந்தத் தடையைத் தளர்த்தி, ஏமன் நாட்டுக்குச் செல்ல தனக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று நிமிஷா பிரியாவின் தாயார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது.

நிமிஷாவின் தாயார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் வாதிடுகையில், “உயிரிழந்த மஹ்தியின் குடும்பத்தினருக்கு நஷ்டயீடு கொடுத்தாவது தன் மகளை மீட்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவர் ஏமனுக்கு நேரில் சென்றால்தான் மஹ்தி குடும்பத்தினருடன் சுமுகப் பேச்சுவார்த்தை நடத்த முடியும். ஆனால் இந்தியா விதித்ததுள்ள தடையால் அவரால் ஏமன் செல்ல முடியவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு நிமிஷாவின் தயாருக்கு உதவ வேண்டும்” என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், “மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் தனது முடிவை தெரிவிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE