“என் அம்மா, அப்பா எங்கே?” - இஸ்ரேல் தாக்குதலில் கால்களை இழந்த 4 வயது சிறுவனின் உலுக்கும் குரல்

By செய்திப்பிரிவு

டெல் அவில்: காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 வயது சிறுவன் ஒருவர் தனது கால்களை இழந்ததுடன், தான் இழந்துவிட்ட பெற்றோரையும், குடும்ப உறுப்பினர்களையும் தேடி வருவது மனதை உலுக்கும் சம்பவமாக இருக்கிறது.

காசா பகுதியின் வடகிழக்கு மூலையில் உள்ள பெய்ட் ஹனௌன் (Beit Hanoun) நகரைச் சேர்ந்தவர் அஹ்மத் ஷபாத் (4 வயது). காசா மீது இஸ்ரேல் நடத்திய கொடூர வான்வழித் தாக்குதலில் அஹ்மத் ஷபாத்தின் பெற்றோர் கொல்லப்பட்டனர். அதோடு இந்தச் சிறுவனின் 17 குடும்ப உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். அஹ்மத் ஷபாத்தின் இரண்டு வயது சகோதரர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். தற்போது இந்தச் சிறுவனை அவரின் மாமா அபு அம்ஷாதான் பாராமரித்து வருகிறார். பெய்ட் ஹனௌன் நகரில் போருக்கு முன்பு 52,000-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்தனர். ஆனால், தற்போது குறைந்த எண்ணிக்கையிலான மக்களே வாழ்ந்து வருகின்றனர்.

இஸ்ரேல் தாக்குதலில் பெற்றோரை இழந்த இந்த நான்கு வயது சிறுவன் தற்போது தன்னுடைய கால்களையும் இழந்துள்ளார். இவரின் துயர நிலையை அபு அம்ஷா விளக்கமாக கூறியுள்ளார். “அஹ்மத் ஷபாத்தின் பெற்றோர் இறந்துவிட்டார்கள். ஆனால், அவன் தன் பெற்றோரைக் கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவன் எழுந்து நடக்க விரும்புகிறான். ஆனால், அவனது கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. 'எனது அப்பா எங்கே? என் அம்மா எங்கே?’ என்று ஒவ்வொரு நாளும் எங்களிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவனை இந்தச் சூழலிலிருந்து மீட்கக் கடுமையாக முயன்று வருகிறோம்” என்றார். சிறுவனின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவர் தெற்கே உள்ள டெய்ர் அல்-பலாஹ் நகரில் உள்ள ஷுஹாதா அல்-அக்ஸா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அகமது ஜயான் அவரை கவனித்துக் கொண்டார்.

இது தொடர்பாக மருத்துவர் ஒருவர் கூறும்போது, “அஹ்மதுவுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. படுகாயமடைந்த மற்ற நோயாளிகளால் மருத்துவமனை நிரம்பி வழிகிறது. அஹ்மதுவின் அறுவை சிகிச்சை முறையான அறுவை சிகிச்சை அரங்கில் நடைபெறாது. பொதுவாகப் பிரசவத்திற்குப் பயன்படுத்தப்படும் அறையில் நடக்கும்” என்றார்.

பின்னணி: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ம் தேதி ராக்கெட் குண்டு வீச்சு தாக்குதலை நடத்தினர். அதன்பின் தரைவழியாகவும், வான் வழியாகவும், இஸ்ரேல் பகுதிக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலியர்களை தாக்கினர். இந்தத் தாக்குதல்களில் ஏறத்தாழ 1,200 பேர் கொல்லப்பட்டனர். 239 பேரை காசா பகுதிக்குள் கடத்திச் சென்றனர். இதனால் இஸ்ரேல் ராணுவம் காசாவின் வட பகுதியில் வான்வழித் தாக்குலில் ஈடுபட்டது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த தாக்குதலில் காசாவில் 11,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால், காசாவின் வட பகுதியில் சுமார் 15 லட்சம் பேர் இடம்பெயர்ந்து காசாவின் தென் பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE