இத்தாலியில் இந்த கிராமத்தில் செட்டிலானால் ரூ.25 லட்சம் - என்ன காரணம்?

By செய்திப்பிரிவு

ரோம்: இத்தாலி நாட்டில் நகரத்திலிருந்து கிராமத்தில் வசிக்க வருவோருக்கு 28 ஆயிரம் பவுண்டு (இந்திய மதிப்பில் ரூ.25 லட்சம்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலி நாட்டில் கலப்ரியா (Calabria) பகுதியில் உள்ள கிராமங்களில் மக்கள் தொகை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக தெரிகிறது. இதன் காரணமாக அங்கிருக்கும் கிராமத்தின் பொருளாதாரம் சரிந்து வருகிறது. இதை சமாளிக்க கலப்ரியா நிர்வாகம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நகரங்களில் இருந்து குடிபெயர்ந்து கிராமத்தில் வசிக்க வருவோருக்கு 28 ஆயிரம் பவுண்டு, அதாவது இந்திய மதிப்பில் 25 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதனோடு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 40 வயதுக்குள் இருக்க வேண்டும்; கைவிடப்பட்ட கடைகள், சிறுதொழில்களை நடத்தவோ அல்லது புதிதாக தொடங்கவோ முன்வர வேண்டும்; 90 நாட்களுக்குள் குடியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலப்ரியா 'இத்தாலியின் கால்விரல்' (Italy's toe) என்று அழைக்கப்படுகிறது. அதோடு அதன் அழகிய கடற்கரை அழகு, பசுமையான மலைப்பகுதி, கலாசாரம் மற்றும் உணவு வகைகளுக்கு பெயர் பெற்றது என்று வர்ணிக்கப்படுகிறது. கலப்ரியாவில் 2021-இல் 5,000-க்கும் குறைவான குடியிருப்பாளர்களே இருந்தனர் எனக் கூறப்படுகிறது. இளம் தலைமுறையினருக்கு முன்னுரிமை அளித்து இத்திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE