நேபாளத்தில் 6.4 ரிக்டரில் நிலநடுக்கம்: டெல்லி உட்பட வட இந்தியாவில்  உணரப்பட்ட அதிர்வுகள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நேபாள நாட்டில் 6.4 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக தலைநகர் டெல்லி உட்பட வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். சீனாவிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்.

கடந்த 30 நாட்களில் மூன்றாவது முறையாக நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை, நவ.3) இரவு 11.32 மணி அளவில் அந்த நாட்டின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 1 நிமிடத்துக்கு மேல் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிகிறது. இதில் 22 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழலில் வட இந்தியாவில் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

புதுடெல்லி, நொய்டா, பாட்னா ஆகிய பகுதிகளில் நில அதிர்வுகளை மக்கள் உணர்ந்துள்ளனர். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். வீட்டில் படுத்திருந்த போது சீலிங் ஃபேன் ஆடியதாகவும், கட்டிலில் அதிர்வுகளை உணர்ந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்துள்ளனர். அதன் பிறகே தங்களை போன்று பலரும் வீட்டை விட்டு வெளியே வந்திருந்ததை அறிந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE