ஈரானில் போதை மறுவாழ்வு மையத்தில் தீ விபத்து: 32 பேர் பலி; 16 பேர் காயம்

By செய்திப்பிரிவு

தெஹ்ரான்: ஈரானில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் காஸ்பியன் கடல் பகுதியை ஒட்டி கிலான் மாகாணத்தில் போதைப்பொருள் மறுவாழ்வு மையம் ஒன்று செயல்பட்டு வந்திருக்கிறது. இதையடுத்து, எதிர்பாராத விதமாக திடீரென இந்த மையத்தில் இன்று அதிகாலை 6 மணிக்கு (உள்ளூர் நேரம்) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர்; மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தெஹ்ரானில் இருந்து வடமேற்கே 200 கி.மீ. தொலைவில் உள்ள லாங்கிரவுடு (Langroud) நகரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரானில் இதுபோன்ற சம்பவங்கள் அரிதாக நடப்பதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE