காசா போரை சில நாட்களுக்கு நிறுத்த வேண்டும்: அமெரிக்க அதிபர் பைடன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

டெல் அவிவ்: காசா போரை சில நாட்களுக்கு நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த மாதம் 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதி நகரங்களில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,400-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 5,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்து வருகிறது. வடக்கு காசா பகுதியில் தரைவழி தாக்குதலையும் தொடங்கியுள்ளது.

'இஸ்ரேல் ராணுவ தாக்குதல்களில் இதுவரை 9,061 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3,760 பேர் குழந்தைகள், 2,326 பேர் பெண்கள். இதுவரை சுமார் 22,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக' பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் கூறியதாவது:

இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போரில் அப்பாவி மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க காசாவில் சில நாட்களுக்கு போரை நிறுத்த வேண்டும்.

காசாவில் சிக்கியுள்ள அமெரிக்கர்களை மீட்க முன்னுரிமை அளித்துவருகிறோம். எகிப்து எல்லை வழியாக அவர்கள் வெளியேற நடவடிக்கை எடுத்து வரும் அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு ஜோ பைடன் தெரிவித்தார்.

காசா போரை நிறுத்த வேண்டும் என்று முதல்முறையாக அதிபர்பைடன் கூறியிருக்கும் சூழலில் அமெரிக்க வெளியுறவுத் துறைஅமைச்சர் அந்தோணி பிளிங்டன்நேற்று இஸ்ரேலுக்கு சென்றார். அப்போது போரை தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பாக இஸ்ரேல்பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அவர் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE