இஸ்ரேல் தாக்குதல் | அல் ஜசீரா காசா பிரிவு செய்தியாளரின் மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேர் பலி

By செய்திப்பிரிவு

காசா நகர்: அல் ஜசீரா ஊடகத்தின் காசா பிரிவு செய்தியாளர் வல் அல் ததோவின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மிகத் தீவிரமான பதிலடியைக் கொடுத்து வருகிறது. காசா நகரமே ஸ்தம்பித்து எங்கும் மரணம் ஓலங்கள் ஒலிக்கின்றன.

இந்நிலையில் கத்தாரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அல் ஜசீரா ஊடகத்தின் காசா பிரிவு தலைவர் வல் அல் ததோவின் மனைவி, மகன்கள், மகள் என 4 பேர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். காசா மீதான தாக்குதல் தொடங்கியபின்னர் இடம்பெயர்ந்த ததோ குடும்பத்தினர் நுசைரத் அகதிகள் முகாமில் தங்கியிருந்தனர். அப்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 பேரும் இறந்துள்ளனர். கூடவே ததோவின் பேரனும் உயிரிழந்ததாகத் தெரிகிறது. நுசைரத் அகதிகள் முகாம் தாக்குதலில் இன்னும் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற முழு விவரம் வெளியாகிவில்லை.

விவரமறிந்து அல் அக்ஸா மருத்துவமனைக்கு வந்த ததோ தனது இறந்த மகனின் சடலத்தைக் கைகளில் ஏந்தி கதறும் புகைப்படம் வெளியாகியுள்ளது. மகனின் சடலத்தோடு மண்டியிட்டுக் கதறிய ததோ எங்களைப் பழிவாங்க எங்கள் குழந்தைகளைக் கொன்று குவிக்கின்றனர் என்றார். அப்போதும்கூட ததோ பிரெஸ் என்று எழுதப்பட்ட மேலாடையை அணிந்தபடிதான் இருந்தார். ததோவின் புகைப்படமும், வீடியோவும் வெளியாகியுள்ள நிலையில் அரபு நாடுகளில் இது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

53 வயதான ததோ பல ஆண்டுகளாக பாலஸ்தீனப் போர் பற்றி பல ஆண்டுகளாகவே செய்திகளை சேகரித்து வந்தவர் ததோ. காசாவாசிகளால் கொண்ட்டாடப்படும் ததோ தற்போது போருக்கு குடும்பத்தை இழந்து நிற்கிறார். பாலஸ்தீனத்தில் குறிப்பாக காசாவில் போர் பாதிப்புகளால் மக்களின் வேதனைகளை சாட்சிப்படுத்தியவரே போரின் சாட்சியாக நிற்கிறார். இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 6500 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE