‘நான் நரகத்தில் இருந்தேன்’: ஹமாஸ் விடுவித்த 85 வயது மூதாட்டியின் வேதனைப் பகிர்வு

By செய்திப்பிரிவு

டெல் அவிவ்: ‘இதுவரை நான் அறிந்திராத நரகத்துக்குச் சென்றேன்’ என்று ஹமாஸ்களால் விடுவிக்கப்பட்ட இரண்டு பிணைக் கைதிகளில் ஒருவரான யோச்செவ்ட் லிஃப்ஷிட்ஸ் கூறியுள்ளார்.

மனிதாபிமான அடிப்படையில் வயது முதிர்ந்த நூரிட் கூப்பர் (79), யோச்செவ்ட் லிஃப்ஷிட்ஸ் (85) என இரண்டு பெண்களை ஹமாஸ் விடுவித்திருந்தது. “உடல்நிலை சார்ந்த காரணங்களுக்காக வயது முதிர்ந்த இருவரை விடுவித்துள்ளோம்” என ஹமாஸ் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், டெல் அவிவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து இரண்டு பெண்களில் ஒருவரான யோச்செவ்ட் லிஃப்ஷிட்ஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் தாங்கிய ஹமாஸ் குழுவினரால் தாங்கள் எவ்வாறு கடத்தப்பட்டோம் என்பதை அவர் விவரித்தார். அவர் பேச்சை அவரது மகள் ஷேரோன் மொழிபெயர்த்துக் கூறினார்.

அவர்,, "எனது தாய் மோட்டார் பைக்கில் கடத்தப்பட்டபோது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவரது சக பிணைக்கைதிகளை கம்பால் தாக்கப்பட்டனர். எனது தாய் ஹமாஸ்களின் மிகப்பெரிய சுரங்க வலையமைப்பைப் பார்த்துள்ளார். அதனை அவர் சிலந்தி வலையுடன் ஒப்பிடுகிறார். எனது தாய் காசாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதும், அவரைச் சிறைப்பிடித்தவர்கள், நாங்கள் குரான் மீது நம்பிக்கையுள்ளவர்கள் அதனால் உங்களைக் காயப்படுத்த மாட்டோம்" என்று தெரிவித்துள்ளனர்.

பிணையக் கைதிகள் காசாவின் கீழ் உள்ள சுரங்கப்பாதையில் தரைகளில் பாய்விரித்து தூங்கவைக்கப்பட்டனர். இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை மருத்துவர்கள் வந்து பார்த்துச் சென்றனர். லிஃப்ஷிட்ஸ் குழுவில் கடத்தப்பட்ட ஒவ்வொரு ஐந்து பேருக்கும் ஒருவர் காவல் இருந்தனர். அவர்கள் கடத்தப்பட்டவர்களின் ஒவ்வொரு விஷயங்களைக் கவனித்துக் கொண்டனர். பெண்களின் சுகாதார விஷயங்களைg கவனித்துக் கொள்ள விபரம் தெரிந்த பெண்கள் இருந்தனர். சுரங்கத்துக்குள் இருந்தபோது உண்ண பாலாடைக்கட்டியும் வெள்ளிரியும் வழங்கப்பட்டன. எங்களைக் கடத்தியவர்களும் அதே உணவைத் தான் சாப்பிட்டனர். ஹமாஸ்களால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள அனைவரும் மீட்கப்படாமல் இந்தக் கதை முடியாது" இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை அன்று இரண்டு அமெரிக்க பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்து இருந்தது. இந்த நிலையில் உடல்நிலை சார்ந்த காரணங்களுக்காக மேலும் இரண்டு வயது முதிர்ந்த பிணைக்கைதிகளை ஹமாஸ்கள் திங்கள்கிழமை விடுவித்தனர். அவர்கள் வீட்டில் இருந்தபோது ஹமாஸ் சிறை பிடித்தது. அவர்களது கணவர்களும் பிணைக் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் இன்னும் ஹமாஸ் வசம் உள்ளனர். சுமார் 220-க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் ஹமாஸ் வசம் தற்போது இருப்பதாக தெரிகிறது.

இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை காசா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உணவு, குடிநீர், மின்சாரமின்றி காசா மக்கள் தவித்து வருகின்றனர். காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-அஹ்லி மருத்துவமனை மீது 4 நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட தாக்குதல் உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது.

திங்கள்கிழமை காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 140-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருப்பதாகவும் ஹமாஸ் தெரிவித்திருக்கிறது. அதே வேளையில், ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE